கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வேகமாக வந்த பைக் மோதி, மூதாட்டி ஒருவர் உயிரிழந்த விபத்தின் கோரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே பொற்றையடி பகுதியைச் சேர்ந்தவர் கங்கையம்மாள்(75). நாகர்கோவில் அருகே இடலாக்குடி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார் கங்கையம்மாள்.
பின்னர் தன் வீட்டுக்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கங்கையம்மாள் சாலையைக் கடக்க முயற்சி செய்துள்ளார்.
அந்த நேரம், அந்தச் சாலையில் நாகர்கோவில் நோக்கி வேகமாக வந்தது பைக் ஒன்று. மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவரின் இருசக்கர வாகனம், சாலையைக் கடந்து கொண்டிருந்த கங்கையம்மாள் மீது அதி பயங்கர வேகத்தில் மோதியது.
இதில், சாலையில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி கங்கையம்மாள் அங்கேயே சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து அருகில் உள்ள கடையின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த கோட்டார் போலீசார் மூதாட்டி கங்கையம்மாளின் உடலை கைப்பற்றி விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அந்தப் பகுதியில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.