
திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2019-2020 ஆம் நிதியாண்டிற்கு தகுதியான பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
20 முதல் 40 வயது வரையுள்ள தகுதியுடைய பெண் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 4-ஆம் தேதிக்குள் திருநெல்வேலி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று அல்லது ரேஷன் கார்டு, தையல் பயிற்சி சான்று (பதிவு செய்யப்பட்ட தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 6 மாத கால பயிற்சி சான்றிதழ்), வயது சான்று, ஜாதிச் சான்று, பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் -2, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல், ஆதார் அடையாள அட்டை, நலிவுற்ற மகளிர் எனில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர் சான்று ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி.மைதானம் எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை-627002. தொலைபேசி எண்-0462-2576265 தொடர்பு கொள்ளலாம்.


