சென்னை: அமமுக அமைப்புச் செயலாளர் இசக்கி சுப்பையா, அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறார். இதனை அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இன்று பழையகுற்றாலத்தில் இசக்கி சுப்பையா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா இது குறித்துக் கூறியபோது, 20 ஆயிரம் பேர் 6 ஆம் தேதி அதிமுக.,வில் இணைகிறார்கள் என்றார் கூறினார்.
மேலும், 48 நாள் மட்டுமே நான் அமைச்சராக இருந்ததாக, என்னை டிடிவி தினகரன் கிண்டல் செய்கிறார். இது ஒரு கட்சியின் தலைவருக்கு அழகு இல்லை. தினகரனின் பேட்டியைப் பார்த்து ஆத்திரம் ஏற்பட்டது. சுயலாபம் பார்த்திருந்தால் நான் எப்போதோ பாஜக.,வில் இணைந்திருப்பேன்; அமமுக.,வில் இணைந்திருக்க மாட்டேன்.
தினகரன் ஏன் இப்படி தடுமாறிப் பேசுகிறார் என தெரியவில்லை. மக்களின் முதல்வராக இ.பி.எஸ்., திகழ்கிறார். நானும் என் தொண்டர்களும் தாய்க் கழகத்தில் இணையவுள்ளோம். நாங்கள் அதிமுகவில் இணைகிறோம் என்று கூறினார் இசக்கி சுப்பையா!
முன்னதாக, நேற்றே இசக்கி சுப்பையா அதிமுக.,வில் இணைவார் என்று கூறப் பட்டது. இந்நிலையில் இசக்கி சுப்பையா குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், இசக்கி சுப்பையா பாதாள சாக்கடை ஒப்பந்தக்காரர். தமிழக அரசிடமிருந்து ரூ.70 கோடி பாக்கி உள்ளது. எனவே எஸ்.பி.வேலுமணியின் தொல்லை தாங்க முடியாமல் அதிமுக.,வில் போய் சேர்ந்திருப்பார் என்று ஊடகங்களில் பேட்டி அளித்தார்.
இசக்கி சுப்பையா குறித்து தினகரன் அளித்த பேட்டி அவரை ரொம்பவே உசுப்பு ஏற்றி விட்டதாகக் கூறப் படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி பகுதியில் அதிகம் பேசப்படும் நபராகத் திகழ்பவர் இசக்கி சுப்பையா. அதிமுக.,வில் செல்வாக்குடன் இருந்தவர். தினகரன் ஆதரவாளராகத் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டார்.
தினகரன் கூட்டம் போட்டுவதாக இருந்தால், இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமான இசக்கி ரிசார்ட்ஸில் தான் கூட்டம் போட்டு ஆளைக் கூட்டுவார். அவர் தங்குவதாக இருந்தாலும் இசக்கி ரிசார்ட்ஸ் தான் களைகட்டும்.
திருநெல்வேலியில் இருந்து அமமுக., நிர்வாகிகள் கூண்டோடு அதிமுக.,வுக்கு தாவிய போது, இசக்கி சுப்பையாவும் அதிமுக., கூடாரத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. இருப்பினும், அவர் மௌனமாக் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிமுக.,வில் தானும் சேர்வதாகக் கூறியுள்ளார்.
இதை அடுத்து, ஓ பி எஸ் தலைமையில் பிரமாண்ட இணைப்பு விழா நடத்தப் பட ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. இதை அடுத்து, தென்மாவட்டங்களில் உள்ள அமமுக நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் அமமுக தலைமை அலுவலகமும் வேறு இடத்திற்கு மாற வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படுகிறது.
அமமுக தலைமை அலுவலகம் பறிபோவதாகக் கூறப் படுகிறது. காரணம், அமமுக., அலுவலகம் இவரது இடத்தில் உள்ளது. அமமுகவில் இருந்து வெளியேறி வரும் ஜூலை 6 ஆம் தேதி அதிமுக.,வில் இணைகிறேன் என்றும், அதிமுக.,வே என்னை அடையாளம் காட்டியது தினகரன் அல்ல! என்றும் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தென்காசியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டார்.
சென்னை, அசோக் நகரில் இவருக்கு சொந்தமான கட்டிடத்தில் தான் அமமுக தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இசக்கி சுப்பையா அதிமுகவில் சேர்ந்து விட முடிவு செய்துள்ளதால், அந்த இடத்தை காலி செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார் டிடிவி தினகரன்.