இந்தியாவில் ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்காக 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் முழு நேர ஊழியர்களாக பணியாற்றுகின்றனர் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் உலக பொது அமைப்பு பொதுச் செயலர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே கூறியுள்ளார்.
மதுரையில் வைகைப் பெருவிழா நடைபெற்று வருகிறது. கலாசார ஆன்மிக நிகழ்வுகளுடன் துறவியர்கள் பலர் பங்கு பெறும் வகையில் நதிகளைக் காப்போம் என்ற முழக்கத்துடன், நதிகளுக்கு உரிய ஆன்மிக முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தி, நதிகளைக் காக்கவேண்டும் என்ற செய்தியை இந்த விழா உணர்த்துகிறது என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த விஸ்வ ஹிந்து பரிஷத் உலக பொது அமைப்பு பொதுச் செயலர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே கூறியபோது…
கோயில்களுக்குச் செல்வோர் ஜாதி வேறுபாடுகளை மறந்து பக்தன் என்ற அடிப்படையில் தரிசனம் செய்ய வேண்டும்.
ஆழ்வார்கள், நாயன்மார்கள், திருவள்ளுவர் போன்ற ஆன்றோர் ஜாதி வேறபாடுகளை களைய முயற்சி எடுத்து வந்தனர். அவ்வழியை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியது அவசியம்.
கோயில்களில் அனைத்து ஜாதியினரும் பூஜைகள் செய்ய வேண்டும் என காந்தியடிகள் முயற்சி எடுத்தார்.
இந்தியாவில் மதமாற்றம் எனும் மோசடி நடந்து வருவது வேதனை அளிக்கிறது. ஹிந்துக்களை மதம் மாற்றுவதற்காக இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேர் முழு நேர ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இப்பணிக்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது.
பிற மதத்திற்கு சென்ற ஒரு லட்சம் பேரை ஹிந்து மதத்தில் வி.எச்.பி., மீண்டும் இணைத்துள்ளது. இப்பணியை பூஜாரிகளும், துறவியர்களும் மேற்கொண்டு வருவது பாராட்டுக்கு உரியது, என்றார்.