
வரும் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் தமிழக பா.ஜ.க. கலை, கலாசார பிரிவு சார்பில் தமிழ்த்தாய் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, நடிகர்-நடிகைகளுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கலைஞன், படைப்பாளி ஆகியோர் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள். பா.ஜ.க.வை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச்செல்வோம். பா.ஜ.க. தமிழர்களுக்கான கட்சி. தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்காக இருக்கக்கூடிய முதன்மை கட்சி பா.ஜ.க.தான். தொடர்ந்து மக்களுக்காக உழைத்துக்கொண்டிருப்போம். பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சுமுகமாக செல்வதால், வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. உடன்தான் கூட்டணி.தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே எங்களுடைய இலக்காகும். வருகிற பாராளுமன்ற தேர்தல் எங்களுக்கும், எங்கள் கூட்டணி கட்சிக்கும் மைல்கல்லாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் நடிகர் பாக்யராஜ், பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.





