
வந்தே பாரத் சேவையை சென்னையில் வரும் ஏப்8 இல் துவக்கி வைக்கிறார் பிரதமர். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில், 2.36 லட்சம் சதுரமீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் 5 தளங்களில் அமைந்துள்ள இந்த புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து, சுமார் 3 கோடியாக அதிகரிக்கும். இந்த புதிய முனைய கட்டிடத்தில் தமிழக கலாச்சாரம் மற்றும் பெருமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் வண்ண மயமான கோலங்கள், படங்கள், ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 80 சோதனை கவுன்ட்டர்கள், 8 சுயசோதனை கவுன்ட்டர்கள், 6 லக்கேஜ் கவுன்ட்டர்கள் மற்றும் 108 குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்யும் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் சோதனைகளை எளிதில் முடித்துக்கொண்டு செல்ல முடியும். புதிய முனையத்தின் கீழ்தளத்தில், விமான பயணிகளின் உடமைகள் கையாளப்படும். மேலும், மல்டி லெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் அமைக்கப்பட்டு, அவை கடந்த பிப். 4-ந்தேதி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.
புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ந்தேதி பிற்பகலில் திறந்து வைக்கவுள்ளார். இதுதவிர, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர் இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடக்கிறது.
இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. வந்தே பாரத் ரெயில் புறப்படும் நேரம், நிறுத்தங்கள், கட்டண விவரம் போன்றவை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுதவிர, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரெயில் சேவையைத் தொடங்கிவைத்து, ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகலப் பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
இந்த விழாவுக்காக பல்லாவரம் அருகேயுள்ள ராணுவ மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஏப். 8-ந்தேதி மாலை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
அன்று இரவு ராஜ்பவனில் தங்கும் பிரதமர், கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் திட்டமிட்டு செய்து வருகின்றனர்.