சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தாம்பரம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன் படி பங்குனி உத்திர திருவிழா தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 05) முவசரன்பேட்டை குளத்தில் நடைபெற்றது.
இந்த குளத்தில் கோயில் தீர்த்தவாரியின் போது சுவாமி சிலையையும் சில அர்ச்சனை பொருட்களையும் நீரில் மூழ்கி எடுக்க அர்ச்சகர்கள் 25 பேர் குளத்தில் இறங்கினர். அப்போது அவர்கள் 2 முறை சுவாமி சிலையையும் அர்ச்சனை பொருட்களையும் மூழ்க வைத்து அவர்களும் மூழ்கினர்.
அதில் 3 ஆவது முறை அவர்கள் மூழ்கும் போது ஒரு அர்ச்சகரின் கால்கள் சேற்றில் சிக்கி அவர் தத்தளித்தார். இதை கண்ட மற்ற அர்ச்சகர்கள் பதறியடித்தபடி அவரை காப்பாற்ற முயன்றனர். இதில் அந்த அர்ச்சகர்களும் நீரில் தத்தளித்தபடியே மூழ்கினர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வரழைக்கப்பட்டனர். அவர்கள் படகு மூலம் தேடியதில் முதலில் 4 அர்ச்சகர்களின் உடல்களை மீட்டெடுத்து உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ராகவன்(18) சூர்யா (22) பானேஷ் (22) யோகிஸ்வரேன் (21) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து 5ஆவதாக ஒருவரின் உடலும் கிடைத்தது. இதையடுத்து அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. தீர்த்தவாரி கோயில் நிகழ்ச்சியின் போது 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின்போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலில் ஒருவர் மட்டுமே ஆழமான பகுதிக்குள் தவறி விழுந்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். இதில், ராகவன், லோகேஸ்வரன், பானேஷ், சூர்யா, ராகவன் உள்ளிட்ட 5 பேரும் நீரில் மூழ்கி 5 உயிரிழந்துள்ளனர். 5 பேரும் 20 முதல் 25 வயது வரை கொண்ட படித்த இளைஞர்கள்.
தகுந்த பாதுகாப்புடன் இந்த நிகழ்வை நடத்தி இருக்க வேண்டும்.தகுந்த பாதுகாப்பு இல்லாமல் நிகழ்வை நடத்தியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான் சட்டமன்றத்தில் இருந்தபோது இந்தத் தகவல் வந்தது. உடனடியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றேன். முதல்வர் நேரில் செல்லுங்கள் என்று கூறினார். முதல்வரின் சார்பில் 5 பேரின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில். நிகழ்வுக்கு முன்பாக காவல்துறைக்கு முறையாக தகவல் அளிக்கப்பட்டதா, இல்லையா? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.”இவ்வாறு அவர் கூறினார்.





