
கேரளத்தில் பிஎஃப்ஐ பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், தமிழகத்தின் ஆனைமலை பகுதிக்கு தப்பி வந்து பதுங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழக பாஜக., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக, புகலிடமாக தமிழகம் மாறி விடக்கூடாது என்ற அக்கறையோடு காவல்துறையும், தமிழக அரசும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவர் இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்ட போது, கடந்த வாரம், கேரளாவில் மனைவியின் முன்னே 30 முறை வெட்டி படுகொலை செய்யப்பட்ட 27 வயது இளைஞர் சஞ்ஜித்தை கொன்ற கும்பல் தமிழகத்தின் கோவைக்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும், இஸ்லாமிய அடிப்படைவாத எஸ் டி பி ஐ இயக்கத்தை சார்ந்தவர்கள் தான் இந்த படுகொலையை செய்துள்ளார்கள் என்றும் கேரள காவல் துறை கூறியுள்ளது.
தமிழகத்தில் அவர்கள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகத்தில் கோவையில் விசாரணை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் நடைபெற்ற ராமலிங்கம், சசிகுமார், எஸ்.ஐ. வில்சன் படு கொலைகளில் தொடர்பிருப்பதாக எஸ் டி பி ஐ இயக்கத்தை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள/ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் படுகொலை செய்து விட்டு தமிழகத்திற்கு தப்பி ஓடி உள்ளதாக சொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக, புகலிடமாக தமிழகம் மாறி விடக்கூடாது என்ற அக்கறையோடு காவல்துறையும், தமிழக அரசும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட. பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் அமைப்புகளை தடை செய்ய வேண்டிய நேரம் இது என்பதை உணர வேண்டும்… என்று தெரிவித்துள்ளார்.


