விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மேலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக 296 மையங்கள் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் தெரிவித்தார்.
ராஜபாளையம், 3 வது வார்டு நகராட்சி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை இல்லம் தேடி கல்வி மையங்களில் தன்னார்வலர்களாக பணிபுரிபவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் ரீடிங் மாரத்தானில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் வேணி தலைமை தாங்கினார். வட்டாரக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரவி வரவேற்றார்.
தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை மற்றும் ரீடிங் மாரத்தான் கற்றல் உபகரணங்களை வழங்கி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் பேசுகையில் கூறியதாவது
கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பு மற்றும் இடைவெளியை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வி அனைத்து மாவட்டங்களிலும் ஐந்து முதல் ஆறு மாத காலமாக செயல்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் 3695 மையங்கள் செயல்பட்டு வருகின்றது. தற்போது மாணவர்களின் நலன் கருதி தேவையின் அடிப்படையில் கூடுதல் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்க தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் அனுமதி அளித்துள்ளது. இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளர் முருகு திருநாவுக்கரசு தன்னார்வலர்கள், தலைமை ஆசிரியை அன்னம்மாள்,மாணவர்கள், ஆசிரியப் பயிற்றுநர் ரத்தின செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.






