
பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் பிரபலமான விழாவாகும்.இந்த ஆண்டு இந்த விழா கடந்த ஜனவரி 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று நடைபெற்றது.
இன்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுத்தல் நடைபெற்றது. மதியம் சுவாமி திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது. பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட திருத்தேர் ரத வீதியில் வலம் வந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து திருத்தேரில் வீற்றிருந்த முருகனை தரிசனம் செய்தனர்.
கேரளா தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தேர்த்திருவிழாவில் பங்கேற்று முருகனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிகக்காக கிரிவல பாதையில் பல்வேறு இடங்களில் தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் பாதுகாப்புக்காக மதுரை சரக டி.ஐ.ஜி தலைமையில் 3 எஸ்.பிக்கள், 24 டி.எஸ்.பிக்கள் கொண்ட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த தற்காலிக பஸ்நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பழனி தைப்பூச விழாவுக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.நாளை தைப்பூச விழா பழனி முருகனுக்கு நடைபெறும்.