
மதுரை மாநகராட்சி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக மாநகராட்சியின் மூலம் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், திருக்கோயிலை சுற்றியுள்ள வடக்கு மாசி வீதி,தெற்கு மாசி வீதி,மேற்கு மாசி வீதி மற்றும் கிழக்கு மாசி வீதி ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டதுடன், அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுகழிப்பறை, கோவிலை சுற்றியுள்ள நடைபாதை, குடிநீர், கோவிலை சுற்றி அமைக்கப்பட்டு வருகின்ற தெருவிளக்கு பணிகள், பொதுமக்கள் வருகை தரும் பாதைகள் மற்றும் மழைநீர் செல்லும் வடிகால்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கும்பாபிஷேகத்தை காண பொதுமக்கள் அதிகளவில் வருகை தர உள்ளதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டார். மேலும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக கோவிலை சுற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அவ்வப்போது கண்காணித்து அவற்றை உடனடியாக அகற்றிடவும் அலுவலர்களிடம் தெரிவித்ததுடன், அப்பகுதியில் உள்ள கழிப்பறைகளை எப்பொழுதும் சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், நடைபாதைகளில் ஆங்காங்கே உள்ள பள்ளங்களை சரிசெய்து, கிரிவலம் செல்லும் பாதைகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், கோயிலை சுற்றியுள்ள தெருவிளக்குகளின் நிலை குறித்து அப்பகுதியில் பார்வையிட்டதுடன், தெருவிளக்குகளில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
திருக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் மாநகராட்சியின் மூலம் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகள் சேர்ந்தவுடன் அவற்றை உடனடியாக மாநகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்திடவும், விழிப்புணர்வு பதாகைகள் வைத்திடவும், அப்பகுதிகளை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, உதவி ஆணையாளர் குமரன் , நகர்நல அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி , நகர திட்டமிடுநர் முரளி, உதவி செயற்பொறியாளர் காமராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.


