![தினமலர் அதிபர் அமரர் வேங்கடபதி உருவப் படத்துக்கு இந்து முன்னணி சார்பில் மலரஞ்சலி! 1 dinamalar 1](https://dhinasari.com/wp-content/uploads/2022/04/dinamalar-1-1024x479.jpeg)
தினமலர் நாளிதழ் அதிபர் டாக்டர் டி.வி.ஆர்.வேங்கடபதி சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப் பட்டது. அவரது திருவுருவப் படத்துக்கு பல்வேறு இடங்களிலும் மலரஞ்சலி செலுத்தப் பட்டது.
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் மூத்த மகனும், தினமலர் திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்பாசிரியருமான டாக்டர் வேங்கடபதி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர்.
நெல்லை தினமலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு இந்துமுன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார். உடன் இந்துமுன்னணி மாவட்ட செயலாளர் சுடலை, மாவட்ட செற்குழு உறுப்பினர் சங்கர், மேலப்பாளையம் மண்டல தலைவர் சுரேஷ், பொதுச்செயலாளர் விமல் ஆகியோர் கலந்து கொண்டனர். அது போல், தென்காசியில் இந்து முன்னணி சார்பில் மலரஞ்சலி செலுத்தப் பட்டது.
![தினமலர் அதிபர் அமரர் வேங்கடபதி உருவப் படத்துக்கு இந்து முன்னணி சார்பில் மலரஞ்சலி! 2 dinamalar 2](https://dhinasari.com/wp-content/uploads/2022/04/dinamalar-2-1024x576.jpeg)
பத்திரிகை உலகின் பிதாமகர் தினமலர் பத்திரிகையின் அதிபரின் மூத்த மகன் உயர்திரு. வெங்கடபதி அவர்கள் மறைவுக்கு இந்து முன்னணியின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில், தினமலர் பத்திரிகையின் குமரி, நெல்லை பதிப்பாளர், தினமலர் குடும்பத்தின் மூத்த குமாரர் , தினமலர் மூத்த பங்குதாரர் உயர்திரு டாக்டர். வெங்கடபதி அவர்கள் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஊடகத்துறையில் அன்னாரது சேவை என்றும் நினைவுக்கூரத்தக்கது. அன்னாரை இழந்து வாடும் அவரது உற்றார் உறவினர்களுக்கும் தினமலர் குழுமத்தின் ஊழியர்களுக்கும் இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. உயர்திரு. வெங்கடபதி அவர்களின் ஆன்மா நற்கதி அடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்… என்று குறிப்பிட்டிருந்தார்.