
2 ஆண்டுகளுக்கு பின் செங்கோட்டையில் சூரசம்ஹார விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பின் சூரசம்ஹார விழா இன்று மாலை கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை வழிபட்டனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் உள்ள தர்மஸம்வர்த்தினி சமேத குலசேகரநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சஷ்டியை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

இதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா இடம்பெற்றது. 5.30 மணிக்கு ஸ்ரீமுருகர் ஆனைமுகம், சிங்கமுகம், மகாசூரன் ஆகிய முகங்களை கொண்ட சூரனை சம்ஹாரம் செய்தார். மூன்று முக்கிய பகுதிகளில் நடந்த சம்ஹார நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” வெற்றிவேல், வீரவேல் என கோஷங்களை எழுப்பி, முருகப்பெருமானை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.