குஷ்பு லட்சியம்- 2016ல் காங்கிரஸ் ஆட்சி: ஈ.வி.கே.எஸ் லட்சியம் – குஷ்பு அமைச்சர்!

Published:

congress_meetingசென்னை: வருகின்ற 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும், அதில் குஷ்பு நிச்சயம் அமைச்சர் ஆவார் என்று பேசினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். சென்னை அரும்பாக்கத்தில் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து மத்திய சென்னை காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகை குஷ்பு ஆகியோர் பேசினர். அதில் பேசிய குஷ்பு, 2016 சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று சொல்பவர்களுக்கு கொஞ்சம்கூட வெட்கம் இல்லை. ஏனெனில் மக்களின் முதல்வராக இருந்தவர் காமராஜர் ஒருவர் மட்டுமே. மிஸ்டு கால் மூலம் தினமும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதாகக் கூறும் பாஜக.,வினர், ஸ்ரீரங்கத்தில் வெறும் ஐந்தாயிரம் ஓட்டுகளே வாங்கினர் என்று பேசினார். இந்தக் கூட்டத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்தில் வருகிற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு கட்டாயம் மந்திரி பதவி வழங்கப்படும். தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை. சாப்பாட்டுக்குக் கூடப் பணம் இல்லாமல் திண்டாடும் நாங்கள் ஓட்டுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? அதனால்தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நிற்கவில்லை. பட்ட மேற்படிப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவோம். மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியைக் காண மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கட்டெறும்பாகத் தேய்ந்து வருகிறது. ஆளுக்கு ஒரு கோஷ்டி என்று பிரிந்து சென்று கொண்டிருகின்றனர். வாசன், ஜெயந்தி நடராஜனைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தையும் வெளியேற்ற வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். பிரம்மப் பிரயத்தனத்துடன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கை, ஆதரவாளர் சஸ்பெண்ட் நடவடிக்கை என்று செயல்பட்டு வருகிறார். ஆனாலும் மனம் தளராமல் 2016ல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி என்று பேசி வருகிறார். இப்போதைய ஹைலைட்… குஷ்புவுக்கு அமைச்சர் பதவி என்பது.

Related articles

Recent articles

spot_img