நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை:

Published:

parliament புது தில்லி: இன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அப்போது அவர், மத்திய அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் விவரித்துப் பேசினார். அப்போது, தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது என்றார். மேலும், இந்த படஜெட் கூட்டத் தொடர் ஆக்கபூர்வமானதாக இருக்கும். மத்திய அரசு, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டி வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஏழைகளுக்கான அரசாக மத்திய அரசு செயல்படுகிறது. தீண்டாமையை ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. நாம் பணவீக்கத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் மாதிரி கிராம திட்டம், கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க நிதி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. உலகின் மிகப்பெரிய நேரடி மானிய திட்டமாக இந்தியாவின் சமையல் எரிவாயு மானிய திட்டம் உள்ளது மிகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஏழை மக்களுக்காவும் இந்த அரசு பாடுபடும். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் தூய்மை பள்ளிகள் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன்மீது இந்திய அரசு மிகுந்து அக்கறை கொண்டுள்ளது. அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் வீட்டுக்கடன் வழங்குவதில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண் கல்விக்காக சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. பெண்களைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது… என்று பேசினார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இப்போது துவங்கி குறைந்த பட்சம் 3 மாதங்கள் வரை நடைபெறுவது வழக்கம். 2015– 2016–ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் ஆகியவற்றை தாக்கல் செய்வதற்கு வசதியாக இந்தக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

Related articles

Recent articles

spot_img