அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் ஓபிஎஸ் அணியினர் கலக்கமடைந்துள்ளனர்.
அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்தது குறித்து அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், வங்கி வரவு, செலவு உள்ளிட்ட நடவடிக்கைகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார். மேலும் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவரே மேற்கொள்வார் எனக் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், என்னைக் கேட்காமல் வங்கி வரவு செலவு கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது. நான்தான் கட்சியின் பொருளாளராக தொடர்கிறேன்.
கட்சியின் விதிகளை மீறி நடைபெற்ற பொதுக்குழுவில் புதிய பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்தது செல்லாது. மேலும் இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். இருதரப்பு கடிதங்களும் வங்கிகளுக்குக் கிடைத்த நிலையில், அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட ஈபிஎஸ் அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக வங்கி கணக்குகளை பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் கையாள, 12ந் தேதி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

