”ஆளுநரை நீக்கச் சொல்லி திமுக., மனு கொடுப்பது ஏமாற்று வேலை,” என, பாஜக., மாநில துணைத் தலைவர் கனகசபாபதி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்கச் சொல்லி திமுக., கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பல மாதங்களாக ஆளுநர் மேல் அவதுாறு பரப்பி, அவரை நீக்க திமுக., வலியுறுத்தி வருகிறது. அதற்கு அவர்கள் சொல்லும் ஒரு காரணம், ‘நீட்’ ரத்து உள்ளிட்ட மசோதாக்களுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்பது.
அரசமைப்புச் சட்டப்படி, ஆளுநருக்கு மசோதாக்களைப் பரிசீலித்து முடிவெடுக்க உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படியே அவர் செயல்படுகிறார். தாங்கள் நினைப்பது போல் செயல்பட தடங்கலாக உள்ளார் என்பதற்காக அவரைக் குறை கூற முடியாது. மேலும், அவர் சனாதனம் பேசுகிறார்; அதனால் மதச்சார்பின்மைக்கு எதிரானவர், பதவிக்குத் தகுதியில்லாதவர் என, தரம் குறைந்த வார்த்தைகளில் பேசுகின்றனர்.
சனாதன தர்மம் என்பது அனைத்து உயிர்களையும் ஒன்றாகப் பாவிக்கும் வாழ்க்கை முறை. அதை பல்லாயிரம் ஆண்டுகளாக பின்பற்றி மதச்சார்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. ஆளுநர் கூறியது வரலாற்றுப் பூர்வமான உண்மை.
பெரும்பான்மை மக்களின் பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி, தீபாபவளிக்கு வாழ்த்து சொல்லாத திமுக., தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூச்சமில்லாமல் சொல்லிக் கொண்டு, ஆளுநரை கேள்வி கேட்பது நியாயமற்றது. ஆளுநரை தனிப்பட்ட முறையில் வசைபாடுவதை திமுக.,நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நேர்மையாகச் செயல்படும் ஆளுநரை தங்களுக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக நீக்க வேண்டும் என்பது நியாயமற்றது. முக்கியமான விசயத்தை ஜனாதிபதியை நேரில் பார்த்துக் கொடுக்காமல் அவரது அலுவலகத்தில் கொடுப்பது என்பது வழக்கத்துக்கு மாறானது.
திமுக., தனது ஊழல்கள், நிர்வாக குளறுபடிகள், இயலாமை ஆகியவற்றை மறைக்கவே ஆளுநரை நீக்க வேண்டும் என்ற விஷயத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதை விடுத்து மாநில நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்துவது மக்களுக்கு உதவிகரமாக அமையும்.
இவ்வாறு, அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
தவறுகளை உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகிறார் என்பதால் தான், ஆளுநரை நீக்குமாறு, திமுக., கோருவதாக, பாஜக., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை:
ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என, திமுக., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளித்துள்ளன. திமுக., எதிர்க்கட்சியாக இருந்தபோது, சென்னா ரெட்டி, சுர்ஜித்சிங் பர்னாலா ஆகியோர் வாயிலாக, அன்றைய அ.திமுக., அரசுக்கு கொடுத்த நெருக்கடிகளை யாரும் மறக்கவில்லை.
ஆளுநர், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாதவராக இருக்கலாம். ஆனால், அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அரசின் பிரதிநிதி என்பதை மறந்து விடக்கூடாது. ‘சமுதாயத்தை பிளவுபடுத்தும் நோக்கிலான, மத ரீதியான கருத்துகளை பொது வெளியில் ஆளுநர் பேசி வருகிறார்’ என்று மனுவில் கூறியுள்ளனர்.
‘திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாதிரியார் ஜி.யு.போப், அதிலுள்ள ஆன்மிகம் என்ற ஆன்மாவை தவிர்த்து விட்டார்’ என ஆளுநர் கூறியிருக்கிறார். இதற்காக கொந்தளிக்கும் திமுக.,வினர், திருக்குறள் பற்றி, ஈ.வெ.ரா., கூறியதை ஒருமுறை படித்து பார்க்க வேண்டும்.
ஆளுநரின் பேச்சில், திமுக.,வுக்கு உடன்பாடு இல்லையெனில், ஜனநாயக ரீதியில் பதில் அளிக்கலாம். அதைவிடுத்து, அவரை நீக்குமாறு கோருவது, திமுக.,வுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.
எல்லா உண்மைகளையும், தவறுகளையும், ஆளுநர் உடனுக்குடன் கண்டுபிடித்து விடுகிறார். அதை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமருக்கு உடனுக்குடன் சொல்லி விடுகிறார் என வருத்தம் இருக்கலாம். அதனால், திமுக.,வினருக்கு இழப்பும் ஏற்பட்டிருக்கலாம். எனவே, அவரை நீக்குமாறு, ஜனாதிபதியிடம் மனு அளித்துள்ளனர்.