சென்னை: லயோலா கல்லூரியில் ஜன.19,20 ஆம் தேதிகளில் நடைபெற்ற கலைக் கண்காட்சியில் பாஜக., ஆர்.எஸ்.எஸ்., நாட்டின் ஸ்வச் பாரத் -தூய்மை இந்தியா திட்டம், மோடி, இந்து கடவுளர் அவமதிப்பு என்று பல அவதூறுப் பிரசாரங்களை முன்னெடுத்து ஓவியக் கண்காட்சி நடைபெற்றுள்ளது. இது இப்போது பெரிய அளவில் பிரச்னையாக வெடித்துள்ளது.
நக்சல் சார்பு இயக்கங்களான, மக்கள் கலை இலக்கியப் பேரவை, மே 17 இயக்கத்தின் கலைக்குழு, செங்கொடி குழு, பாரதிராஜாவின் தமிழர் பண்பாட்டுக் கலை இலக்கியப் பேரவை, டைரக்டர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் பிளாக்–ஷீப் என்ற யூடியூப் சேனலை நடத்துபவர்களும்தான் லயோலாவில் நடந்த நாடகங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
முன்னதாகவே திட்டமிட்டு பல்வேறு ஆலோசனைகளையும் மேற்கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப் பட்டுள்ளது. லயோலா கல்லூரியின் மேலிட திட்டமிடலுடன், வந்தால் பார்த்துக் கொள்வோம் என்ற கோஷத்துடன் தான் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது தெரியவருகிறது.
மேலும், இந்து இயக்கங்கள் இது தொடர்பாக ஏதேனும் வழக்கு தொடுத்தாலோ, புகார்களை அளித்தாலோ, இதற்காக கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிஸ பாஜக., என்றும், மோடி அரசு என்றும் பிரசாரம் செய்ய திட்டமிடப் பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு பிரச்னைகள் வந்தால், கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவதாகப் போர்க்கொடி துாக்க வேண்டும் என்றும், உடனடியாக தி ஹிந்து பத்திரிகையின் ‘ராம்’ தலைமையிலான ‘பத்திரிகை சுதந்திர அமைப்பு’ மூலம் கண்டனம் வெளியிட்டு, இதையே தேர்தல் லாப நோக்கிலான புதிய அரசியல் போர்க்களமாக மாற்றிவிட வேண்டும் என்றும் விவாதிக்கப் பட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பே, இது குறித்த பேச்சுகள் மற்றும் அடுத்த கட்ட பிளான் குறித்தும் விவாதங்கள் நடந்திருக்கின்றன.
லயோலா கல்லூரி விவகாரத்தையே கையில் எடுத்துக் கொண்டு, திமுக., சார்பு அரசியல் நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. ஆளும் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் பிரசார ரீதியில் நெருக்கடி கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி குறித்து, காவல் துறையிடம் சென்று புகார் கூறினார்லும், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட முடியாது என்றும், அப்படியே எடுத்தாலும், அதை திமுக., அரசியல் நோக்கில் பார்த்துக் கொள்ளும் என்றும் கூறியிருக்கிறார்கள்.