என்னப்பா.. உங்க மாநிலத்துலேர்ந்து இங்கே வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்யறாங்களே… நீங்க ஒண்ணும் கவனிக்க மாட்டேன்றீங்க என்று நக்கலாகக் கேட்டார் தில்லி பத்திரிகையாள நண்பர் ஒருவர்.
ஆமாம். நான் கவனிக்கலைன்னு இல்லை! உலகமே தமிழ்நாட்டை கவனிக்கணும்னு அவர்கள் மத்திய அரசிடம் கெஞ்சிக் கொண்டு போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை மத்திய அரசு… குறிப்பாக மோடி கைகொடுத்து தூக்கி விட வேண்டும் என்றேன்..
சரி அவர்களின் நோக்கம் என்ன? என்று கேட்டார் அந்த நண்பர்.
வேறென்ன நோக்கம்..? தமிழ்நாடு அரசு கைவிட்டுடிச்சி. அரசு அதிகாரிகள் கைவிட்டுட்டாங்க. இனிமே காப்பாத்த மோடியை தவிர வேறு யாரும் இல்லைன்னு டோட்டலா சரண்டர் ஆகியிருக்காங்க அவ்ளோதான்! மோடியின் அருமையை அவங்க புரிஞ்சிட்டிருக்காங்க என்றேன்.
உண்மைதானே!
தமிழக விவசாயிகள் தில்லியில் நடத்துகின்ற போராட்டத்தின் ஒவ்வொரு நாள் நீட்டிப்பிலும் அவர்கள் உலகத்துக்கு சொல்லும் செய்தி…
* தமிழக அரசு – செயலற்ற அரசு
* இங்கே அரசாட்சி என்று எதுவும் நடக்கவில்லை!
* அரசு இயந்திரம் என்பது பழுதாகி ரிப்பேர் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
* அரசு அதிகாரிகள் சோம்பேறிகள்; தின்றுவிட்டு ஊழலில் திளைத்து குட்டித் தூக்கம் போட்டு அவர்கள் சுயநலத்துடன் அவர்கள் வேலையை அவர்கள் பார்த்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்!
* திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையாலாகாத கோமா ஸ்டேஜில் இருக்கிறார்கள். தில்லிக்குச் சென்று குரல் எழுப்பும் அளவுக்கு எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு இருந்தும் ஒரு பிரயோசனமும் இல்லை. அவர்களை நம்பவே இயலாது. நம்பிக்கைக்கு உரியவர்களாக அவர்கள் இருந்திருந்தால், விவசாயிகள் நேரடியாக தில்லிக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
* தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள், பாமக., உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும் நம்பத்தகுந்தவை அல்ல, அவர்களால் எதையாவது செய்ய முடியும் என்ற அணுஅளவு நம்பிக்கை கூட இப்போது விவசாயிகளுக்கு இல்லை. நம்பிக்கைக்கு உரிய ஒரே நபர் மோடி மட்டுமே!
* தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டு தண்ணீர் வரவேண்டும் என்றாலும் அது மோடியால் மட்டுமே முடியும்!
* ஆறுகளை இணைக்க வேண்டுமா? அது மோடியால் மட்டுமே முடியும்!
* தமிழ்நாட்டில் மணல் குவாரிகளால் ஆறுகள் நீர்த்தடம் அற்றுப் போய் நீர் இல்லாமல் வறண்டு போகக் காரணம், திமுக., அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிக்காரர்கள்தான். குவாரிகளால் பணத்தைக் கொழிப்பதும், குண்டர் படையை வைத்து மிரட்டுவதும், ஊர்க்காரர்களை அரட்டி ஒடுக்குவதும், அரசு கையில் இருப்பதால் போலீஸாரை வைத்து பொய் வழக்கு போடுவதும் இவர்கள்தான்! எனவே இவர்களை எதிர்த்து எந்த பிரயோசனமும் இல்லை. இவர்களின் யோக்கியதை வெளி உலகுக்கு காட்ட வேண்டுமானால், அது தில்லியில் நேரடியாக மத்திய அரசின் கதவைத் தட்டினால்தான் நடக்கும்!
* ஊடகங்கள் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை. எந்த மணல் கொள்ளைக் காரன் டிவி நடத்துறானோ அவனிடமே போய் மணல் கொள்ளைன்னு சொல்ல முடியாது.
எந்த ஏரி குளம் ஆக்கிரமித்து கல்லூரிகளைக் கட்டி வைத்திருக்கிறானோ அவனிடம் போய் புலம்ப முடியாது.
எந்த அரசியல் கட்சிகள் வஞ்சித்துக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டிக் கொண்டிருக்கின்றனவோ அந்த டிவி.,க்களிடம் போய் ஒன்றும் ஆகப் போவதில்லை.
எனவே தனக்கென்று டிவி.,யெல்லாம் வைத்து உருட்டி மிரட்டி கட்டப் பஞ்சாயத்து செய்ய வழியில்லாத பாஜகவினரையோ, மோடியையோதான் நம்பியாக வேண்டிய சூழ்நிலை. அதைக் காட்ட சென்னையில் போராட முடியாது. தில்லியே சிறந்தது.
* இப்படி எல்லா மட்டத்திலும் முழுதுமாக நம்பிக்கை இழந்துவிட்டதால், வேறு வழியே தெரியாமல் தில்லியில் போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு, எதிர்க்கட்சிகள், அரசு இயந்திரம், அதிகார வர்க்கம், நீதித்துறை, காவல்துறை எவரேனும் சற்றே பாசமும் அன்பும் அக்கறையும் காட்டி விவசாயிகளைப் பரிவுடன் அணுகியிருந்தால், அவர்கள் தில்லிக்கு வரவேண்டிய தேவையே இருந்திருக்காது. அதுவும் மாநில அளவில், மாநில மட்டத்தில், மாநில அரசால், மாநில அதிகாரிகளால், மாநில காவல்துறையால் உள்ளூர் மட்டத்தில் தீர்க்க வேண்டிய பிரச்னைக்குக் கூட மத்திய அரசின் கதவைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை!
* இப்படி, மாநில அளவில் எல்லாவற்றையும் தாண்டிக் கொண்டு, கூட்டாட்சித் தத்துவத்தை சிதைத்துப் பார்ப்பதற்கான அறைகூவலை விவசாயிகள் விட வேண்டிய நிலைக்கு செத்துப் போய்க் கிடக்கும் மாநில அரசு தள்ளியிருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக…
பரம ரகசியம்…
பரம ஏழை விவசாயியான அய்ய….கண்ணுக்கும் உடன் இருக்கும் விவசாயிகளுக்கும் இந்த யோசனையைச் சொல்லி, காசு கொடுத்து கூட்டத்தைக் கூடி போராட வைத்து, தான் ஒருவனே இந்தியாவின் ரட்சகன் என்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளவும், தன் பெயரை அகில உலக அளவில் புகழ் பெறச் செய்வதற்கும், தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைப்பதற்க்கும் மோடியே நேரடியாக இதில் ஈடுபட்டுள்ளார்… 🙂 என்பது குயுக்தி நிறைந்த அரசியல் அதிர்ச்சி!
– செந்தமிழன் சீராமன்!


