பல கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகள் மீட்பு..

Published:

1805745 6 - 2026

சென்னையில் சிலைகள் பதுக்கல் எதிரொலி பல கோடி ரூபாய் மதிப்பிலான 7 சாமி சிலைகள் மீட்கப்பட்டது. ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, அஸ்திர தேவர், அம்மன், வீர பத்ரா, மகாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் 7-வது பிரதான சாலை பகுதியில் ஒரு வீட்டில் பழங்கால சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, ஐ.ஜி. தினகரன் ஆகியோரது மேற்பார்வையில் டி.எஸ்.பி.க்கள் முத்துராஜா, மோகன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீ தேவி, பூதேவி, அஸ்திர தேவர், அம்மன், வீர பத்ரா, மகாதேவி சிலைகள் மீட்கப்பட்டன. சிலைகளின் உரிமையாளர், கலைப் பொருட்களை சேகரிப்பது தனது பொழுதுபோக்காக இருந்ததாகவும், 2008 மற்றும் 2015-ம் ஆண்டு தீனதயாளனிடம் இருந்து பழங்கால சிலைகளை வாங்கியதாகவும் தெரிவித்தார்.

நிற்கும் விஷ்ணு மற்றும் ஸ்ரீதேவி சிலையில் உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோவில் என்று பொறிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ கோவிலுக்கு சென்று விசாரித்ததில் இந்த சிலைகள் அங்கு திருடப்பட்டது உறுதியானது. மீதமுள்ள சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. நின்ற பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய 3 சிலைகளையும் விரைவில் ஆதிகேசவ கோவிலில் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img