
கேரளாவில் சுட்டெரிக்கும் வரலாறு காணாத வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது.மலைப் பகுதியான செங்கோட்டை அருகே உள்ள அச்சன் கோவில் பகுதியில் 40டிகிரி செல்சியஸ் புனலூர் பகுதியில் 41டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கேரளாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வகையில் வெப்பநிலை பதிவாகி வருகின்றது. வெளியில் தலைகாட்டமுடியாத அளவுக்கு தகித்துவரும் வெயிலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மலைப் பகுதியான செங்கோட்டை அருகே உள்ள அச்சன் கோவில் பகுதியில் 40டிகிரி செல்சியஸ் புனலூர் பகுதியில் 41டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.சபரிமலை பம்பையில் இதைவிட கடுமையான வெயில் வாட்டி எடுக்கிறது.
இந்நிலையில் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தினசரி வெப்பநிலை குறியீட்டு அளவை கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது. அதன்படி, கோழிக்கோடு, ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரத்தில் மட்டும் சுமார் 54 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.
இது உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, வெப்ப பக்கவாதம்(ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஐஎம்டி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வெப்பக் குறியீடு என்பது வெப்பநிலையைக் கணக்கிடும் ஒரு குறிகாட்டியாகும்.
வெப்பநிலை ஒரே மாதிரியாக இருக்கும்போது கூட, அதிகரிக்கும் ஈரப்பதத்துடன் குறியீட்டெண் உயரும். அதன்படி கடந்த சில தினங்களாகக் கடற்கரையோரங்களில் வெப்பக் குறியீடு அதிகமாக இருப்பதால் கேரள மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது.




