திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பேக்கரி கடையை அடித்து உடைத்ததாக தொல்.திருமாவளவனின் கட்சியைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளிப்பாளையத்தில் ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடைக்கு சாப்பிடுவதற்காக கடந்த 2ஆம் தேதி இரவு பத்து மணி அளவில் சிலர் சென்றுள்ளனர். அவர்கள் அங்கே காளான் வாங்கி சாப்பிடும் போது கூடுதலாக ஸ்பூன் கேட்டனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர்கள் சாப்பிட்ட உணவுக்கு பணம் தருவது தொடர்பாக கடை ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அங்கிருந்து சென்ற அவர்கள், சற்று நேரத்தில் 15க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்துள்ளனர். அனைவரும் சேர்ந்து, கடையின் கண்ணாடி மற்றும் வெளியே நிறுத்தப்பட்ட கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இது குறித்து போலீஸில் புகார் அளிக்கப் பட்டது. அந்த புகார் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார், அங்கே விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடையை அடித்து நொறுக்கியதாக, தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குண்டடம் ஒன்றிய செயலாளர் காளிமுத்து, துணைச் செயாளர் நந்தகுமார், சரவணன், அம்மாசை, மதன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.