மக்கள் நலக் கூட்டணியை தமிழக மக்கள் ஆட்சியில் அமர வைப்பார்கள்: வைகோ
தமிழகத்தில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு புகையிலை விற்பனைக்கு அனுமதி : ராமதாஸ் குற்றசாட்டு
செல்ஃபி எடுத்த பெண் கடலில் தவறி விழுந்து மாயம்
மும்பை:
மும்பையில் செல்ஃபி எடுக்கும்போது இளம்பெண் ஒருவர் கடலில் தவறி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்று, கடலில் குதித்த இளைஞரும் மாயமானார். இருவரையும் மும்பை பாந்த்ரா போலீஸாருடன் இணைந்து, தீயணைப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
மும்பை பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதியில் சனிக்கிழமை காலை 10.50 மணி அளவில் இளம்பெண் தாராணம் அன்சாரி (18) தன் நண்பிகளான அஞ்சும் கான், கசூரி கான் ஆகிய இருவருடன் கடற்கரை அருகே நீர்ப் பாதையில் உள்ள பாறையில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கடல் அலை மிக உயரமாக எழுந்ததால் அனைவரும் கடலில் தவறி விழுந்தனர். அவர்களது கூச்சலைக் கேட்டு அவ்வழியாகச் சென்ற ரமேஷ் என்பவர் கடலில் விழுந்தவர்களை மீட்டக் குதித்தார். அவர் கசூரி, அஞ்சும் இருவரைக் காப்பாற்றி கரையில் விட்டுவிட்டு தாரானம் கானைக் காப்பாற்ற முயன்றபோது பெரிய அலையில் சிக்கிக் கொண்டார். கடல் அலையில் சிக்கிக் கொண்ட ரமேஷ் மற்றும் தாரானம் ஆகிய இருவரையும் தேடும் பணி ஹெலிகாப்டர் உதவியுடன் நடந்து வருகிறது.
இந்தப் பெண்கள் மூவரும் கோவண்டி கிழக்குப் பகுதியின் கிராமப் புறமான பைங்கான்வாடியில் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவிகள்.
முகனூலில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க பிரமுகரை கைது செய்த தமிழக காவல்துறை : தமிழிசை கடும் கண்டனம்
மக்கள் விரோத அதிமுக., திமுக.,வை எனக்குப் பிடிக்காது: விஜயகாந்த்
பெரம்பலூர்:
அதிமுகவை போலவே திமுகவையும் எனக்கு பிடிக்காது. காரணம் இவை இரண்டும் மக்கள் விரோத கட்சிகள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்குழுக் கூட்டத்தில் குற்றம் சாட்டிப் பேசினார்.
தேமுதிக 11-வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடைபெற்றது. அக் கட்சித் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருடன் மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், மற்றும் கட்சியின் 21 எம்.எல்.ஏக்கள், 52 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் என சுமார் 1,550 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பற்றி முடிவு எடுக்க தலைவர் விஜயகாந்துக்கு முழு அதிகாரத்தை அளித்து இந்தப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் தீர்மானங்களை கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் எம்.எல்.ஏ. வாசித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…
நிவாரணத்தை அதிகரிக்க வேண்டும்:
சமீப மழைவெள்ளத்தால் வீடு, உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு வழங்கும் நிவாரண உதவி மிகக்குறைவாக இருப்பதால் பொருட் களை இழந்தவர்களுக்கு தமிழக அரசே இலவசமாக பொருட் களை வழங்கவேண்டும். பாதிக் கப்பட்ட மாவட்டங்களில் வாட் வரியை ரத்து செய்யவேண்டும்.
திருவள்ளூர் முதல் தூத்துக்குடி வரை மழைவெள்ளத்தால் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு வெள்ளநிவாரணம் ரூ.13 ஆயிரத்து 500-ஐ அதிகரித்து வழங்கவேண்டும். விவசாய பயிர்களுக்கு பொதுகாப்பீட்டு திட்டத்தை மாற்றி தனிநபர் விவசாய காப்பீட்டு திட்டத்தை கொண்டுவர வேண்டும்.
பூரண மதுவிலக்கு:
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு நன்றி:
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி அளித்தமைக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்த தீர்வுகாண வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அதுகுறித்த உண்மைகளை, மக்களுக்கு வெளிப்படையாக அல்லது உயர்நீதிமன்ற அனுமதிபெற்று முழுவிவரங்களை வெளியிடவேண்டும். மேலும் தமிழகத்தில் மணல், கிரானைட், தாதுமணல் போன்ற கனிமவள கொள்ளைகள் குறித்து நேர்மையாக அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்திரவிட வேண்டும்.
மக்களின் வரிப்பணத்தில் அதிகவிலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்வதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
கரும்பு கொள்முதல் ஒரு டன்னுக்கு ரூ.3,500 விலை அறிவிக்க வேண்டும். நெல் ஒரு குவிண்டாலுக்கு வழங்கும் தொகை ரூ.1470-ஐ உயர்த்தி வழங்க வேண்டும்.
தமிழகத்தில் லஞ்சம் ஊழல் பெருகிவிட்ட நிலையில் அ.தி.மு.க.வை சார்ந்தவர்கள் அனைவரின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மைநிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் லஞ்சம், ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரி உரியநேரத்தில் முறையாக திறக்கப்படாததால் சென்னையில் பெரும் வெள்ளசேதம் ஏற்பட்டதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
தமிழக அரசை கலைத்துவிட்டு ஆளுனர் ஆட்சியை ஏற்படுத்திய பிறகு தமிழக சட்டமன்ற தேர்தலை எந்த வித முறைகேடுகளும் இல்லாமல் நடத்திட வேண்டும்.
தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற இப்பொதுக்குழு ஏகமனதாக உறுதி ஏற்கிறது.
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாட்டை அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். தமிழக வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும், ஏழை, எளிய நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எத்தகைய முடிவெடுத்திட தே.மு.தி.க. நிறுவனத்தலைவரும், கழக பொதுச்செயலாளருமான விஜயகாந்துக்கு முழுஅதிகாரத்தை அளித்து இப்பொதுக்குழு ஒருமனதாக தீர்மானிக்கிறது.
இவை உள்ளிட்ட 23 தீர்மானங்கள் இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, ராகுகாலம் முடிந்த பின்னர் 10.30 மணிக்கு மேல் விஜயகாந்த் அரங்குக்கு வந்தார். தமிழகத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள், அப்துல்கலாம், சசிபெருமாள், இப்ராஹிம் ராவுத்தர் உள்ளிட்டோருக்கு கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் அதிமுகவை கடுமையாக தாக்கிப் பேசினார், தொடர்ந்து திமுகவையும் தாக்கிப் பேசினார். பாஜகவை கவனமாக தவிர்த்தார்.
மழை, வெள்ளம் என்று மக்கள் தத்தளித்த இடத்தில் போய் வாக்காளப் பெருமக்களே என்கிறார் ஜெயலலிதா. விதி எண்-110 அறிவிப்பில் எத்தனையோ திட்டங்களை அறிவித்த ஜெயலலிதா, அதில் கல்விக்கு, மருத்துவத்துக்கு என்று மக்களுக்கு உபயோகமாக எதையாவது நிறைவேற்றி இருக்கிறாரா? சினிமாவில் டூப் போடாமல் சண்டை போட்டவன் நான். சிறையில் அடைக்கப்பட்ட எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விடுதலை செய்யாதிருந்தால் இந்த பொதுக்குழு முடிந்த கையோடு நான் ஜெயலலிதா வீட்டின் முன்பாக போய் அமர்ந்திருப்பேன். என்னை கைது செய்வார்கள், அவ்வளவுதானே? என் தொண்டர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நான் சும்மா இருக்க மாட்டேன். அதிமுக ஆட்சியில் காவல்துறை செயல்பாடு மிக மோசமாக உள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி என்பதெல்லாம் நடக்காத காரியம். ஆட்சி மட்டுமல்ல இந்த 5 ஆண்டுகளோடு அதிமுகவும் முடிந்தது. அதிமுகவை போலவே திமுகவையும் எனக்கு பிடிக்காது. காரணம் இவை மக்கள் விரோதக் கட்சிகள். சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை இங்கே தந்திருக்கிறீர்கள். அதன்படி நல்ல முடிவை இன்னொரு பொதுக்கூட்டத்தில் அறிவிப்பேன் என்று இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார்.
காளி மகாசக்தி பற்றி கீழாம்பூர் பேச்சு!
யாதுமாகி நின்றாய் – காளி! எங்கும் நீ நிறைந்தாய்,
தீது நன்மை யெல்லாம் – காளி! -தெய்வ லீலை யன்றோ?…
பூத மைந்தும் ஆனாய் – காளி! – பொறிக ளைந்தும் ஆனாய்,
போத மாகி நின்றாய் – காளி – பொறியை விஞ்சி நின்றாய் .
சக்தியின் வடிவத்தை-ஒளியை கட்டுக் கடங்காத தமிழ் ஓட்டத்தில் சொன்னவர் மகாகவி பாரதியார்!
காளியின் தோற்றத்தை- மாட்சியை – பரிபாலனத்தைப் பாட்டு வடிவத்தில் பொரிந்து கொட்டியவர் எட்டயபுரக் கவிஞன் பாரதி.
இன்று இரவு டெப்போ ரோடு ருத்ர காளியம்மன் கோயில் வளாகத்தில் நடந்த கீழாம்பூர் சங்கர சுப்ரமணியனின் பேச்சு, மகா காளியையும், மகாகவி பாரதியையும் சுற்றிச் சுழன்ற பேச்சு! வழக்கமான பாரதி இன்று அங்கு வரவில்லை. ஆன்மீக பாரதியாக வந்தான். ஆனால், பாரதியின் கவிதைகளில் ஆன்மிக உணர்வு இல்லாதது எங்கிருக்கின்றன!
ஆலய நிர்வாகக் குழுவின் தலைவர் திரு.ராமச்சந்திரன் கீழாம்பூருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்ய, நிர்வாகக் குழுவைச் சேர்ந்த வெண்பாக் கவிஞர் வரதராஜன், அனைவரையும் வரவேற்று சங்கரசுப்ரமணினின் இலக்கிய ஆற்றல் பற்றியும், மறைந்த பத்திரிகையாளர் ஏ.என்.சிவராமனின் பேரன் அவர் எனவும் அறிமுகப் படுத்தினார்.
காளியின் சிறப்புகளை சுவையாகச் சொன்ன கீழாம்பூர், தன் தொடக்க உரையில், திருநெல்வேலிக்காரர்களில் பெரும்பலர் பத்திரிக்கையாளர்கள் எனவும், கும்பகோணத்துகாரர்கள் எழுத்தாளர்கள் எனவும் குறிப்பிட்டார். கீழாம்பூர் கிராமம், திருநெல்வேலிக்குப் புகழ் சேர்ப்பதை எண்ணிப் பார்க்கிறோம்.
நின்றாய் காளி’ என்று மகாகவி பாரதியார் அவளது சக்தியைப் போற்றினார். மூடனாக இருந்த காளிதாசரின் நாவில் சரஸ்வதி நர்த்தனமிடச் செய்து மகாகவியாக உலகம் உள்ளவரை நிலைத்த புகழ்பெற துணை புரிந்தாள்.இந்து சாம்ராஜ்ஜியம் கண்ட சத்ரபதி சிவாஜிக்கு வீரமும் தீரமும் தந்தவள் அவள்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு பிரத்தியட்சமாகக் காட்சி தந்து அற்புதம் செய்தவள் அவள்…இப்படியெல்லாம் உலக மாந்தர்களுக்கு அருள் பாலித்தவள் காளி என்ற கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், காளியின் பிறப்பிடம் சிவபெருமானின் கழுத்து எனக் கூறி, அதற்கான புராண வரலாற்றையும் சொன்னார்.
சரளமான தமிழில் பேசிய கீழாம்பூர், இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்கள் அனைத்துமே இறைவனால் ஏற்கப்படுகின்றது என்பதை விளக்கியவிதம், காளியைப் பற்றிய கல்வெட்டுகள் பல்லவர் காலத்திலேயே இருந்த சான்று, கங்கை இரு கரையுடையான் குகனின் ஏற்ற தாழ்வில்லாத பக்தியைப் போல் (மீனையும் தேனையும் ராமனிடம் அன்போடு நீட்டிய பக்தி) தெய்வங்களில் உயர்வு தாழ்வு காட்டாத பாரதி காட்டிய காளி – மாரி -அம்மன் மீ தான அபரிமிதமான பக்தி, சிவபெருமானின் தலையில் கங்கையின் குடி இருப்பு ஏனென்ற விளக்கம், உ.வே.சா-கிவாஜவின் காஞ்சி முனிவருடனான தொடர்பு…என பல விஷயங்களை, முக்கால் மணி நேரத்தில் நன்றாகவே பிழிந்து தந்தார் கீழாம்பூர்.
கோபக்கார மனைவியை பத்ரகாளி எனக் கூப்பிடுவதை ஏற்காத அவர், கணவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்பவள், பத்ரகாளி மனைவி என்று கிவாஜவின் வார்த்தைகளை நினைவுபடுத்தினார்.
நாளை இலக்கிய வட்டத்தின் சார்பில், ‘கம்பன் ஒரு பத்திரிகையாளன்’ என்ற தலைப்பில் பூன் கெங் எம்.ஆர்.டி. ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள கலாங் சமூக மன்ற கிளப்பின் முதல் மாடி அறையில் மாலை 3 மணிக்கு பேசுகிறார்.
செய்தி – ஏ.பி.ராமன் (சிங்கப்பூர்)
யாதுமாகி நின்றாய் காளி: சிங்கப்பூரில் சொற்பொழிவு
சிங்கப்பூர் டெப்போ ரோடு அருள்மிகு ருத்ரகாளியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் நேற்று மாலை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள்”யாதுமாகி நின்றாய் காளி..” என்ற தலைப்பில் சுமார் ஒன்றேகால் மணி நேரம் அருமையான சொற்பொழிவினை வழங்கினார் .
கவிஞர் ஏ.கே.வரதராஜன் அவர்கள் கீழாம்பூர் அவர்களைப்பற்றி அறிமுகம் செய்து வைக்க மாலை 7.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 8.45 வரை இனிது நிகழ்ந்தது .
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் காஞ்சி மகாபெரியவர் அவர்களை தாம் கண்ட பேட்டியில் இருந்து காளி குறித்த தகவல் களை சொல்ல ஆரம்பித்தவர்
பத்திரிகையாளர்கள் என்றால் திருநெல்வேலி என்றும் எழுத்தாளர்கள் என்றால் கும்பகோணம் என்றும் ஆதாரம் காட்டி பேசியபோது அரங்கு கைதட்டல்களால் அதிர்ந்ததற்கு காரணம் ஆரம்பத்திலேயே அறிமுக உரை நிகழ்த்திய கவிஞர் ஏ.கே.வரதராஜன் அவர்களும் கீழாம்பூர் அவர்களும் நெல்லைச்சீமை என்பதால் தான்.
பத்ரகாளி என்று நாம் பயன்படுத்தும் சொல்லுக்கு இன்றைய அர்தத்ததை கேட்ட பெண்கள் எல்லோரும் இனி தங்களை யாராவது அப்படி சொன்னால் சந்தோஷப்படுவார்கள்.
காளியின் அருள் இருந்தால் யார் வேண்டுமானாலும் காளிதாசன் மாதிரி புகழ் பெறலாம் என்றும் எல்லோரையும் காக்கும் கடவுள் காளி என்பதையும் பேசிய விதம் அருமை.
வில்லுப்பாட்டு என்று நாம் சொல்லும் வில்லிசை தோன்றிய வரலாற்றை சொன்னது வந்திருந்தோர் இதுவரை கேட்டிராத புதிய தகவல் .
இத்தகைய அருமையான பேச்சை நாம் தவற விட்டு விட்டோமே என்று நீங்கள் எண்ணினால் கவலை வேண்டாம் இன்று மாலை மூன்று மணியளவில் பூன்கெங் எம் ஆர் டி அருகில் உள்ள காலாங் கம்யூனிட்டி கிளப்பில் கவிஞர் ஏ.கே.வரதராஜன் அவர்கள் ஏற்பாட்டில் “கம்பன் எனும் பத்திரிக்கையாளன்” என்ற தலைப்பில் கீழாம்பூர் அவர்களின் சொற்பொழிவு இடம்பெற உள்ளது வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெறலாம் !
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப திண்ணப்பன் /முனைவர் இரத்தின வெங்கடேசன் /தினமலர் வெ.புருஷோத்தமன்/மூத்த எழுத்தாளர் ஏ.பி.ராமன்/தொழிலதிபர் ஜோதி மாணிக்க வாசகம்/கவிஞர் ஏ.கே.வரதராஜன் மற்றும் ஏராளமான பிரமுகர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தது மேலும் சிறப்பு.
செய்தி: கீழை. ஏ. கதிர்வேல்

