Home Blog Page 6131

ஏமனில் இருந்து நாடு திரும்பிய மேலும் 452 இந்தியர்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பினர்

மும்பை: ஏமனில் சிக்கியிருந்த மேலும் 452 இந்தியர்கள் நேற்று மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, அங்கே பணியாற்றி வரும் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவ்வாறு அங்கே சிக்கியிருந்த இந்தியர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேசன் ரஹத்’ என்ற பெயரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. இதுவரை இந்திய கடற்படை, விமானப் படையினர் சேர்ந்து இருந்து 2,300 இந்தியர்கள் மற்றும் 176 வெளிநாட்டினரை பத்திரமாக மீட்டு வந்துள்ளனர். மேலும் 1,000–க்கும் மேற்பட்டவர்கள் பத்திரமாக இந்தியா வந்து இறங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஏமன் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட 225 இந்தியர்கள் ஜிபோட்டியில் இருந்து இரவு 10.40 மணி அளவில் சி–17 குளோப் மாஸ்டர் விமானத்தில் மும்பை வந்தடைந்தனர். மேலும் 227 பேர் நள்ளிரவில் மும்பை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்கள் 452 பேரும் ரயில் மற்றும் விமானம் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றடைந்தனர்.

ஏப்.11 அன்று சென்னை வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் இலவச வேலைவாய்ப்பு முகாம்

employment-opportunitiesசென்னை: சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படும் இலவச வேலை வாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை ஏப்.11 அன்று நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சியரின் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தலுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11.04.2015 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், சீனிவாசா அவென்யூ சாலையில் அமைந்துள்ள செட்டிநாடு ராஜhமுத்தையா மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இம்முகாம் மூலம் பல தனியார் துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ், ரிசப்ஷனிஸ்ட், வாய்ஸ் & நான்வாய்ஸ் பிராசசிங் , டெக்னிக்கல் அசிஸ்டென்ட், ஆப்தமாலிஸ்ட் கண்சல்டன்ட், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு பணியாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 18 முதல் 35 வயது வரையுள்ள எட்டாம் வகுப்பு,பத்தாம் வகுப்பு, மேல்நிலைக்கல்வி ,பி.ஏ. , பி,எஸ்.சி.., பி.காம்., ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் முதுகலை பட்டதாரி கல்வித்தகுதி உடையவர்கள் தகுதியுடையவர் ஆவார். இப்பணிக் காலியிடங்களுக்கு உரிய தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் சான்றுகளுடன் உடன் நேரில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணியமர்த்தல் சேவையானது முற்றிலும் இலவசமாக நடத்தப்பட உள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்;

ஊழல் ஆட்சியை அம்பலப்படுத்த வேண்டுமாம்: ஊடகங்களுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஊழல் ஆட்சியை அம்பலப் படுத்த ஊடகங்கள் மவுனம் கலைக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர்  வெளியிட்ட அறிக்கையில்…

ஜனநாயக நாட்டில் ஓர் ஆட்சி எவ்வாறு நடக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திரும்பிய திசையெல்லாம் ஊழல், கனிம வளங்கள் கொள்ளை, நிர்வாகச் சீர்கேடுகள், சட்டப்பேரவை ஜனநாயகப் படுகொலை, அடக்குமுறைகள், கருத்து சுதந்திரம் பறிப்பு என மோசமான ஆட்சிக்கு என்னென்ன இலக்கணங்கள் உண்டோ, அவை அனைத்துக்கும் ஒட்டுமொத்த உதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது இன்றைய தமிழக அரசு.
எங்கும் ஊழல்… எதிலும் ஊழல்
தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத அமைச்சகத்தை தொலைநோக்கியில் பார்த்தாலும் காண முடியாது; வலைவீசித் தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. ஊழல் இல்லாத துறையை கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசே வழங்கலாம். அந்த அளவுக்கு எங்கும் ஊழல்… எதிலும் ஊழல் என்ற அவல நிலை நிலவுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை முதல் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான மின்சாரம் வரை அனைத்துக் கொள்முதல்களிலும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று வருகிறது. அரசுத் துறையில் எந்த வேலை நடக்க வேண்டியிருந்தாலும் அதற்கான கையூட்டுத் தொகையை நிர்ணயித்து வெளிப்படையாகவே பேரம் பேசும் அவலம் தமிழகத்தில் நிலவுகிறது.  ஆற்று மணலில் தொடங்கி, கிரானைட், தாது மணல் வரை அனைத்து இயற்கை வளங்களும் ஆட்சியாளர்களின் முழு ஆதரவுடன் கொள்ளையடிக்கப் படுகின்றன. இயற்கை வளங்கள் கொள்ளை பற்றி அரசிடம் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கையை அரசே வெளியிடாமல் முட்டுக்கட்டைப் போடுகிறது. அரசின் தடையை மீறி, தாது மணலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கனிமங்கள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. அரசே அதற்கான உதவிகளை திரைமறைவில் செய்து கொடுத்துவிட்டு அப்படி ஒரு கடத்தலே நடக்கவில்லை என்று சாதிக்கிறது. இந்த ஊழல்கள் தொடர்பாக 18 குற்றச்சாற்றுகள் கொண்ட பட்டியலை ஆளுனரிடம் அளித்து அவை குறித்து விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கும்படி பாட்டாளி மக்கள் கட்சி கோரியது. அதன்பிறகு கூட ஆட்சியாளர்கள் திருந்தவில்லை… மாறாக இது போன்ற புகார் பட்டியல்களை கிடப்பில் போடச் செய்வதற்கான வித்தைகள் எங்களுக்குத் தெரியும் என்று திமிராக கூறுகின்றனர்.
சட்டமன்றமா… புகழ்பாடும் மன்றமா?
மக்கள் மன்றமான சட்டப்பேரவை தனிநபர் புகழ் பாடும் அவையாக மாறி விட்டது. மன்னர்களின் அவையில் மன்னனை புலவர்கள் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுச் செல்வார்கள். தமிழக சட்டமன்றத்திலோ ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதல்வரும், அவருக்கு துணையாக உள்ள அமைச்சர்களும் மக்களைச் சுரண்டி பொருள் ஈட்டுவதற்கு வாய்ப்பு அளித்ததற்காக ஊழல் குற்றவாளியின் இல்லாத பெருமையை 80 பக்க நோட்டுகளில் எழுதி வைத்துப் படிக்கிறார்கள். மக்களின் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வாய்ப்பே அளிக்கப்படுவதில்லை; வாய்ப்பு அளிக்கப்பட்டாலும் அரசின் குறைகளை சுட்டிக்காட்டினால் அடக்கி அமர வைக்கப்படுகிறார்கள். அவையில் எதிர்ப்புக்குரல் எழுப்பும் உறுப்பினர்களை அன்றைக்கு மட்டும் வெளியேற்றும் நடைமுறையிலிருந்து மாறி, அடுத்தக் கூட்டத் தொடர்வரைக்கும் நீக்கி வைக்கும் அளவுக்கு சட்டப்பேரவை ஜனநாயகம் தழைத்தோங்கியிருக்கிறது.
அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை 
சட்டப்பேரவையில் இப்படி என்றால், அவைக்கு வெளியே அரசுக்கு எதிராக எவரும் குரல் கொடுக்கக் கூடாது என்பதற்காக 144 தடை உத்தரவு, அதையும் தாண்டி குரல் கொடுப்பவர்கள் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துதல் என்று விதவிதமான அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அடுக்கடுக்காக அவதூறு  வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. என் மீதும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்குகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டி விட்டது. இத்தகைய வழக்குகள் தொடரப்படுவதற்கு உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கண்டனம் தெரிவித்து வரும் போதிலும் அவதூறு வழக்கை மிரட்டல் ஆயுதமாக பயன்படுத்தும் அரசின் அணுகுமுறை தொடர்கிறது.
நிர்வாகச் சீர்கேடு
தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று உள்ளதா? எனக் கேட்கும் அளவுக்கு நிர்வாக சீர்கேடு நிலவுகிறது. திறமையான அதிகாரிகள் ஓரங்கட்டப்பட்டு ஆட்சியாளர்களுக்கு துதிபாடும் அதிகாரிகளுக்கு மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றிருந்தாலும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. ஊழலுக்கு எதிரான அதிகாரிகளுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கடிகள் அளிக்கப்படுகின்றன. இன்னொருபுறம் கடந்த 46 மாதங்களில் 8,000-க்கும் மேற்பட்ட கொலைகள், 81 ஆயிரம் கொள்ளைகள், 4700-க்கும் அதிகமான பாலியல் வன்கொடுமைகள் என சட்டம்-ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது.
நாளொரு பூஜை, பொழுதொரு யாகம்! 
ஆட்சியாளர்களோ இதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல் ஊழல் குற்றவாளியை மீண்டும் முதல்வராக்க நாளொரு பூஜை, பொழுதொரு யாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தையும், ரகசியக் காப்பு உறுதிமொழியையும் மீறி, ஊழல் குற்றவாளியின் வழிகாட்டுதலில் தான் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டதாக முதலமைச்சரே சட்டப்பேரவையில் அறிவிக்கிறார்.மக்கள் தான் பாவம்….. இந்த கோமாளிக் கூத்துக்களையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
நீதியை நிலைநாட்டுமா நீதிமன்றங்கள்?
இந்த அவல ஆட்சியை கண்டிக்க வேண்டிய பொறுப்பும், திருந்தாவிட்டால் அடுத்து வரும் தேர்தலில் விரட்டியடிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடம் விதைக்க வேண்டிய கடமையும் ஊடகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு உண்டு. அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும் என்பதைப் போல ஊழல் செய்யும் ஆட்சியாளர்களை மக்களால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தண்டிக்க முடியும்; நீதிமன்றங்களால் தான் அப்போதைக்கு அப்போதே தண்டிக்கமுடியும். எனவே, ஊழல் குறித்த  வழக்குகளின் விசாரணையை விரைவாக முடித்து தீர்ப்பளிக்க நீதிமன்றங்கள் முன்வர வேண்டும்.
ஊடகங்கள் மவுனம் ஏன்? 
இன்னொருபுறம், ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளும், அவதூறு வழக்குகளும் கட்டவிழ்த்து விடப்படும் போதிலும் அதற்கு எதிராகவும், ஆட்சியின் அவலங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்காமல் ஊடகங்கள் மவுனம் காப்பது வருத்தமளிக்கிறது. ஆட்சியின் கேடுகளை அம்பலப்படுத்த வேண்டும் என்ற வேட்கை ஊடகத்தினருக்கு இருந்தாலும், அதிகார மட்டத்திலிருந்து அளிக்கப்படும் நெருக்கடிகள் தான் அவர்களின் கைகளையும், பேனாவையும் கட்டிப்போட்டிருக்கின்றன என்பதை உணர முடிகிறது.
வெள்ளையரையும், கொள்ளையரையும் விரட்டிய ஊடகங்கள்
வெள்ளையர்களின் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் என்ற உணர்வை தமிழக மக்களிடையே ஏற்படுத்துவதற்காக சுதேச மித்திரன், இந்தியா, தேசபக்தன், சுதேசபிமானி, தமிழ்நாடு, தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி உள்ளிட்ட இதழ்கள் ஆற்றிய பணியை நம்மில் பலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், விடுதலைப் போராட்ட வரலாற்றில் படித்திருக்கிறோம். ஆனால், 1991&96 ஆட்சிக் காலத்தின் அவலங்களையும், ஊழல்களையும் தி இந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, தினகரன், தினமலர் உள்ளிட்ட இதழ்கள் அம்பலப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அந்த ஆட்சி  விரட்டியடிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்ததை நாம் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.
2001-2006 ஆட்சி 
1991-96 ஆட்சியை விட 2001-06 ஆட்சியில் ஊழலும், அடக்குமுறையும் 10 மடங்கு அதிகமாக இருந்தது. ஒரே இரவில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பணிநீக்கம், மக்களுக்கான உரிமைகள் பறிப்பு, பேரூந்து மற்றும் மின்சார கட்டணங்கள் உயர்வு, விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட தவறுகளை ஊடகங்கள் தோலுரித்ததால் தான் 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை ஆளுங்கட்சி சந்தித்தது;இது 2006 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. ஆனால், அதைவிட 100 மடங்கு மோசமான, ஊழல் நிறைந்த ஆட்சி இப்போது நடைபெற்று வரும் நிலையில், அதைத் தோலுரிக்கத் தயங்கி மவுனம் கடைபிடிப்பது நியாயமா? என ஊடகங்கள் சிந்திக்க வேண்டும்.
இதுவே தக்க தருணம்
ஊடகங்கள் தங்களின் மவுனத்தைக் கலைக்க இதுவே சரியான நேரம் ஆகும். இதற்குப் பிறகும்  ஊடகங்கள் தங்களின் கடமையை செய்யாவிட்டால், நடிகர் ரஜினிகாந்த் கூறியதைப் போல தமிழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாமல் போய்விடும். எனவே, அ.தி.மு.க. அரசின் தவறுகள் மற்றும் ஊழல்களை அம்பலப்படுத்த ஊடகங்கள் முன்வர வேண்டும். இதுவே, தாங்க முடியாத துயரத்தில் தவிக்கும் மக்களுக்கு அவை ஆற்றும் ஈடு இணையற்ற சேவை என்பதில் ஐயமில்லை – என்று கூறியுள்ளார்.

கொடுத்த பணத்தைக் கேட்டதால் இளம்பெண் கொலை: உறவினரே கொலை செய்த கொடூரம்

robert-lady-murder-caseசென்னை: கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதால், பெண்ணைக் கொலை செய்து மழை நீர்க்கால்வாயில் தூரத்து உறவினரே போட்டு விட்டுச் சென்றுள்ளார். சென்னை- சேலையூரை அடுத்த தேணுகாம்பாள் நகர் 1 ஆவது பிரதானச் சாலையில் ஞாயிறு அன்று காலை இளம்பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்ட நிலையில் மழைநீர் கால்வாயில் சடலமாகக் கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் சேலையூர் போலீசார் அந்தப் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்தப் பெண் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், அந்தப் பெண் குறித்த விவரங்கள் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெண் குறித்து நேற்று அடையாளம் தெரிந்தது. அவர் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த சிங்காரம் என்பவரது மகள் ஜெரினா மரியா (27) என தெரிய வந்தது. சாந்தோம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணி செய்து வந்தார் ஜெரினா மரியா. போலீஸார் வெளியிட்ட கொலை செய்யப்பட்ட பெண்ணின் படத்தைப் பார்த்து ஜெரினா மரியாவின் தாயார் அல்போன்சா அடையாளம் காட்டியுள்ளார். பின்னர், ராயப்பேட்டை மருத்துவமனையில் அவரது சகோதரர் ஜெரினா மரியாவின் உடலைப் பார்த்து உறுதி செய்தார். கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியில் சென்ற ஜெரினா மரியா வீடு திரும்பவில்லை. இது குறித்து கொருக்குப்பேட்டை போலீசில் அல்போன்சா புகார் செய்தார். இதை அடுத்து, சென்னை மாநகர போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் சேலையூர் போலீஸ் உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் ஜெரினா மரியாவை அவரது நெருங்கிய உறவினர்தான் அழைத்துச் சென்றதாகத் தெரிய வந்தது. இதை அடுத்து, அவரைப் பிடித்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்தப் பெண் கொலை குறித்து தகவல் தெரியவந்தது. ஜெரினா மரியாவின் உறவினர் ஹென்றி ராபர்ட் (35). திருமணமாகி விவாகரத்தானவர். இவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஜெரினா மரியாவுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் உறவினர்கள் எனத் தெரிய வந்ததால், இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றிவந்த ஹென்றி ராபர்ட் அவ்வப்போது செலவுக்கு ஜெரினா மரியாவிடம் பணம் பெற்றுள்ளார். தான் சொந்தமாகத் தொழில் செய்வதாகக் கூறி ஜெரினா மரியாவிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வாங்கியிருந்தாராம். இந்தப் பணத்தைக் கேட்டு ஜெரினா மரியா அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய வீட்டிற்கு வந்து பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு ராபர்ட் கென்னடி, ஜெரினாவிடம் கூறியதன் பேரில், ஜெரினா அவர் வீட்டுக்கு வந்துள்ளார். இருவரும் வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது, வாய்த் தகராறு ஏற்பட்டு, ஆத்திரத்தில், ஜெரினாமரியாவை ஷு லேசால் கழுத்தை இறுக்கி கொலை செய்து, அவர் அணிந்திருந்த 10 சவரன் மதிப்புள்ள 1 செயின், நெக்லஸ், கம்மல் மற்றும் மோதிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, பின்னர் பிரேதத்தை நள்ளிரவு தன்னுடைய காரில் எடுத்துக் கொண்டு மாடம்பாக்கத்தில் வீசிச் சென்றுவிட்டதை ஒப்புக் கொண்டார். அதன்பேரில், சந்தேக மரணமாகப் பதிவான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு அந்தப் பெண்ணைக் கொலை செய்த ராபர்ட் கென்னடி (35), கைது செய்யப்பட்டு, அவர் ஜெரினாவிடமிருந்து அபகரித்த 10 சவரன் தங்க நகைகள், பணம் ரூ.1,80,000/- மற்றும் லான்சர் கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கொலை தொடர்பாக அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தூரத்து உறவினர் ஒருவரே இவ்வாறு பெண்ணைக் கொலை செய்தது சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியது.

பாலசந்தர் புகழ் என்றும் மெய்

K B Balachandar
Iyakunar Imayam Balachandar
  தெய்வத்தாய் பெற்றெடுத்து ஸர்வர் சுந்தரமாய் உழைத்து, பூஜைக்கு வந்த மலரை நீர்குமிழியாக்காமல், நீல வானத்திலே நானலை வளைத்து, மேஜர் சந்திரகாந்தாக பாமா விஜயமும் செய்து, சினிமா உலகில் எதிர் நீச்சலிட்டு, ரசிகர்களின் மனதில் தாமரை நெஞ்சமாகி, சிறந்த இயக்குநருக்கு பூவா தலையா போடவைத்து, பிரச்சினைகளை இரு கோடுகளாக்கி, பத்தாம் பசலியையும் மாற்றி அவர்களை எதிரொலியாக்கி, நவகிரகங்களையும் காவியத்தலைவர்களாக மாற்றி, நான்கு சுவர்களுக்குள் இருந்த சினிமாவை ரசிகர்களிடம் நூற்றுக்கு நுறு வாங்க வைத்து, தன் சிறந்த படங்களாலே புன்னகை புரிய வைத்து, அனைவரையும் கண்ணா நலமா என்று கேட்டு, வெள்ளி விழா படங்களை கொடுத்து, வேறு பட்ட கருத்துகளை அரங்கேற்றம் செய்து, சொல்லத்தான் நினைக்கிறேன் என்று அனைத்தையும் சொல்லி, அவள் ஒரு தொடர்கதையாகி, நான் அவனில்லை என்று சொல்லி, அபூர்வ ராகங்களை, மனமத லீலையாக்கி, அவர்களை கொண்டு பட்டின பிரவேசம் செய்து, நிழல்களையும் நிஜமாக்கி, தப்பு தாளங்களையும் சரியாக போட்டு, நினைத்தாலே இனிக்க வைத்து, நூலையே வேலியாக்கி, வறுமைக்கும் சிவப்பு நிறம் கொடுத்து, எங்க ஊர் கண்ணகியை உலகறிய செய்து, தில்லு முல்லு செய்யாமல் தண்ணீர் தண்ணீர் தந்து ஏக் துஜே கேலியேவில் தமிழனை இந்தி மொழியில் பிரபலமாக்கி, படங்கள் பல நாட்கள் ஓட வைத்து, அக்னி சாட்சியாக்க, பொய்க்கால் குதிரை கொண்டு, அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லி, கல்யாண அகதிகளையும், சிந்து பைரவி பாடவைத்து, புன்னகை மன்னாகி, மனதில் உறுதி வேண்டும் என்று எல்லோருக்கும் செய்து, உன்னால் முடியும் தம்பி என்று எல்லோரையும் ஊக்குவித்து, புது புது அர்த்தங்களையும், ஒரு வீடு ஒரு வாசலில் அழகனை வைத்து, வானமே எல்லையாக, ஜாதி மல்லியோடு டூயட் பாடி, கல்கியாகி, பார்த்தாலே பரவசமான படங்களை தந்து, பொய்யாகி போன பாலசந்தரின் புகழ் என்றும் மெய்யாக இருக்கும். அவர் இறைவனிடம் சிறந்த இடத்தை பெற வாழ்த்துக்கள்

அருள் என்றால், வெறும் தூறல் இல்லை,

அருள் என்றால், வெறும் தூறல் இல்லை, கன (பண) மழைதான்!. சொன்னவர்-வி.கிருஷ்ணமூர்த்தி11054482_924033570960760_4881393388095922503_n தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (ஒரு சிறு பதிவு) ஒருவர் பெரியவாளிடம் சுமார் பன்னிரண்டாயிரம் ரூபாய் சமர்ப்பித்தார். மஹாபெரியவாள், “எனக்கு ஏதுக்கடா பணம்?” என்று சொல்லிவிட்டு,அப்பொழுது சந்தர்ப்பணை சமையற்கட்டில் பணிபுரிந்து வந்த ஒருவரைக் கூப்பிட்டனுப்பி, “உன் பெண்ணுக்குக் கல்யாணம் என்றாய். பணம் வேண்டாமா? இதோ இருக்கு எடுத்துக்கோ!” என்றார்கள். பணம் கொடுத்த அடியாரின் கண் எதிரிலேயே. “மடத்தில் எத்தனையோ சிப்பந்திகள் ..குறைந்த சம்பளத்தில் மனப்பூர்வமாக ..உழைக்கிறார்கள்.அவர்கள் வீட்டில் ..கல்யாணம் கார்த்தி என்றால் பணத்துக்கு ..எங்கே போவார்கள்?” என்றார். அருள் என்றால், வெறும் தூறல் இல்லை, கன (பண) மழைதான்!.

ராஞ்சி தெருக்களில் ஹாய்யாக புல்லட் பைக் ஓட்டிய தோனி

dhony-bikeராஞ்சி: பைக் பிரியரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், மகேந்திர சிங் தோனி தன் சொந்த ஊரான ராஞ்சியின் தெருக்களில் தன் ஆசை புல்லட்டில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல் வலம் வந்தார். பைக் பிரியரான தோனியிடம் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள புல்லட் பைக்குகள் உள்ளன. தற்போது ராஞ்சியில் உள்ள அவரின் வீட்டில் மட்டும் 16 பைக்குகள் உள்ளனவாம். இவை தவிர, சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு வந்தால், அவர் ஜாலியாக சுற்றுவதற்காக, அந்த நகரங்களிலும் தலா இரண்டு பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தன்னிடம் விலையுயர்ந்த பல பைக்குகள் இருந்தாலும், முதல் முதலாக வாங்கிய புல்லட் பைக் மீதுதான் அவருக்கு ஆசை அதிகம். அதை அவ்வப்போது ஓட்டி மகிழ்வாராம். ஏப். 8 ஆம் தேதி முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பயணப்பட உள்ள தோனி அதற்கு முன் ஆசையாக தனது சொந்த ஊரில் புல்லட்டில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.

தங்கம் சவரனுக்கு ரூ.248 உயர்வு

சென்னை: தங்கம் சவரனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது. கடந்த ஏப். 2ஆம் தேதி ஒரு சவரன் ரூ.20 ஆயிரத்து 152 ஆக இருந்தது. பின்னர் விலை குறைந்து நேற்று ரூ.20 ஆயிரத்து 104 ஆக விற்றது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.248 உயர்ந்து ஒரு சவரன் ரூ.20 ஆயிரத்து 352 ஆக விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.31 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,544–க்கு விற்கப் படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ.215 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.38 ஆயிரத்து 315 ஆகவும், ஒரு கிராம் ரூ.41 ஆகவும் உள்ளது.

சுவர் இடைவெளியில் சிக்கிய பூனை: 5 வருடமாக உணவளித்த முதியவர்

  5 வருடங்களாக சுவர்களின் இடைவெளிக்குள் சிக்கித் தவித்த பூனைக்கு முதியவர் ஒருவர் உணவளித்து வந்துள்ளார். இந்தச் செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2010ம் ஆண்டு எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த ஆப்டோ என்ற முதியவர், அங்கே இரு சுவர்களின் இடைவெளியில் குட்டிப்பூனை ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டார். அதனை வெளியே எடுக்க முயன்றும் அவரால் முடியவில்லை. இதனால், தினமும் ரயில் நிலையம் வந்த அவர், பூனைக்கு உணவளித்து வந்தார். துவக்கத்தில் அவரின் இந்தச் செயலை ஏளனமாகப் பார்த்த பலர் பின்னர் அவருக்கு உதவி செய்தனர். சுமார் 5 வருடங்கள் கடந்த நிலையில் அண்மையில் சுவருக்கு வெளியே தெரிந்த பூனையின் வளர்ந்த வாலைப் படமெடுத்து அதனையும் இது குறித்த செய்தியையும் பேஸ்புக்கில் வெளியிட்டார். இதை அறிந்த பிராணிகள் நல ஆர்வலர்கள் 5 மணி நேர போராட்டத்திற்குப் பின் பூனையை மீட்டனர். https://youtu.be/Suk5PNzKnKw