Home Blog Page 6144

ஏழைகளுக்கு கடன் வழங்க பரிவு காட்டுமாறு வங்கிகளுக்கு மோடி அறிவுரை

மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80 ஆவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஏழைகளுகு கடன் வழங்க பரிவு காட்டுமாறு வங்கிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்,ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் கடன் வழங்குவதில் பரிவுடன் செயல்படுமாறு பொதுத் துறை வங்கிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பு பொதுத் துறை வங்கிகளுக்கு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், பொருளாதார ரீதியிலான பல கடுமையான சவால்களை எதிர்கொண்டு, 80 ஆண்டுகளை ரிசர்வ் வங்கி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். நாட்டின் பல்வேறு கட்ட வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி உறுதுணையாக இருந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது. இனிதான் அந்த வங்கிக்கு நிறைய பொறுப்புகள் காத்திருக்கின்றன. ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயராமல், நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியப்படாது. எனவே, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், பழங்குடியினர், விவசாயிகள் ஆகியோரின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ரிசர்வ் வங்கி கவனம் செலுத்த வேண்டும் என்றார். மேலும், கடன் சுமைகளால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு மிகுந்த வேதனைக்குரியது. அவற்றை வெறுமனே செய்திகளாக மட்டும் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டியது பொதுத் துறை வங்கிகளின் கடமை இல்லையா? என்று கேள்வி எழுப்பிய மோடி, விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் விதிமுறைகளைத் தளர்த்தி, மனிதாபிமான அடிப்படையில் கடன்களை வழங்க பொதுத் துறை வங்கிகள் முன்வர வேண்டும். அவற்றை திரும்ப வசூலிக்கும்போதும் அதே முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். விரிவான நிதிக் கொள்கைகள்: எதிர்வரும் 2035-ஆம் ஆண்டில் தனது நூற்றாண்டு விழாவை ரிசர்வ் வங்கி கொண்டாடவுள்ளது. இந்த இடைப்பட்ட இருபது ஆண்டுகளுக்கான விரிவான நிதிக் கொள்கைகளை ரிசர்வ் வங்கி வகுக்க வேண்டும். அவை, அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும்படியாக இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா 2019-ஆம் ஆண்டிலும், நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் 2022-ஆம் ஆண்டிலும், ரிசர்வ் வங்கியின் 90-ஆவது ஆண்டு விழா 2025-ஆம் ஆண்டிலும், நூற்றாண்டு விழா 2035-ஆம் ஆண்டிலும் கொண்டாடப்படவுள்ளது. குறிபிட்ட இந்த நிதிக் கொள்கைகளை வகுப்பதற்கு இந்த நான்கு ஆண்டுகளையும் அடையாள இலக்குகளாகக் கொண்டு ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும் என்றார் மோடி. https://youtu.be/n70PYmgm0Bo

என்னுடைய முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: சிம்ரன் வேண்டுகொள்

simran1 தேர்ந்த நடிப்பாலும் திறமையாலும் சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் கோலோச்சி நின்றவர் நடிகை சிம்ரன். நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக திருமணத்திற்கு பிறகு நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்பொழுது சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிம்ரன். ‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் ‘Logo’ வை வெளியிட்டு பேசிய சிம்ரன் கூறியதாவது “எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் பெரும் முக்கிய இடத்தைக் கொண்டது. என் கணவர் தீபக் உடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க அதுவே காரணமாய் இருக்கிறது.” “நான் நடிகையாக இருந்த அனுபவமும் எனது சின்னத்திரை நிகழ்ச்சிககளை தயாரித்த அனுபவமும் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணத்திற்கு உறுதுணையாய் இருந்தது. எனது இந்த முயற்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் மற்றும் நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள்” “எனது ரசிகர்கள் எனக்களித்த ஆதரவிற்கும் நன்மதிப்பிற்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சினிமாவின் மீது எனக்கிருக்கும் ஆர்வமே என்னை படங்கள் தயாரிக்கவும் மற்றும் இயக்கவும் உந்துதலாய் உள்ளது. சினிமாவின் தரத்தை அடுத்த இடத்திற்கு முன்னேற்ற புது புது திறமைகள் அறிமுகப்படுத்த வேண்டியிருப்பதை உணர்கிறேன்.” “இவ்வருடம் இரண்டு படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒன்றிற்கு ஒன்று வித்தியாசமான கதை களத்தை உடையதாய் இருக்கும். எனது முயற்சிகளை எப்போதுமே ரசிகர்கள் ஆதரித்ததுண்டு. தயாரிப்பாளர், இயக்குனர் என்ற எனது இந்த முயற்சியையும் அனைவரும் ஆதரிக்க வேண்டும்” என்று தனக்கே உரித்தான நம்பிக்கையுடன் கூறினார் நடிகை சிம்ரன்.

ஊழல், மது, புகையிலைக்கு எதிராக பிரச்சார இயக்கம்: பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

சென்னை: ஊழல் மது, புகையிலைக்கு எதிராக பிரசார இயக்கம் நடத்துவது என்று பாமக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை மந்தைவெளியில் இன்று நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா, முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே. மணி தலைமை வகித்தார். கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் அப்துல் அலி சையது, இணைப்பொதுச் செயலாளர் இசக்கி படையாச்சி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி மற்றும் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், துணைத்தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதை மத்திய சுகாதாரத் துறை ஒத்திவைத்திருப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. ‘‘புகையிலையின் பாதிப்பு குறித்து இந்தியாவில் எந்த விதமான ஆய்வும் நடத்தப்படவில்லை என்பதால், புற்றுநோய் ஏற்படுவதற்கு புகையிலை தான் காரணம் என்ற முடிவுக்கு வர முடியவில்லை. எனவே, இதுகுறித்து தெளிவான முடிவுக்கு வரும் வரை எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிடும் திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்’’ என்று சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழுவின் தலைவரும், பா.ஜ.க. மக்களவை உறுப்பினருமான திலிப்குமார் காந்தி பரிந்துரை செய்ததற்கும், ‘‘ புகை பிடிப்பதால் தான் புற்றுநோய் வருகிறது என்றால், தொடர்ந்து சிகரெட் பிடிப்பவர்களில் பலருக்கு இதுவரை புற்றுநோய் வரவில்லையே ஏன்? புற்றுநோயை உருவாக்குகிறது என்பதற்காக புகையிலப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்றால், சர்க்கரை நோயை உருவாக்குகிறது என்பதற்காக வெள்ளை சர்க்கரையை தடை செய்யப்பட்டதா? புகையிலைப் பொருட்கள் மீது எச்சரிக்கைப் படங்களை வெளியிடுவது தேவையற்றது’’ என்று குழு உறுப்பினரும், பா.ஜ.க. மக்களவை உறுப்பினருமான ஷியாம்சரண் குப்தா கூறியதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஷியாம் பீடி என்ற பீடி நிறுவனத்தின் உரிமையாளரான ஷியாம் சரண் குப்தாவை புகையிலையின் தீமைகள் குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவின் உறுப்பினராக நியமித்ததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதாக் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராம் பிரசாத் சர்மா, தினமும் 60 சிகரெட் பிடிக்கும் முதியவர்கள் கூட இன்னும் உயிருடன் வாழ்கிறார்கள்…. புகையிலைக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு இல்லை என்று கூறியதற்கும் கூட்டத்தில் பேசிய மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாசு உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தை உடனே வெளியிடவேண்டும் என்றும் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் ரூ.26,188 கோடி என்ற அளவை எட்டியுள்ள நிலையில் 2015&16ஆம் ஆண்டில் ரூ.29,627 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஊழல் அதிகரித்து வருவது குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தை சீரழிக்கும் ஊழல், மது ஆகியவற்றின் தீமைகள் குறித்தும், புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் முடிவை மத்திய அரசு ஒத்தி வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் தமிழகம் முழுவதும் அடுத்த 30 நாட்களுக்கு பரப்புரை இயக்கம் மேற்கொள்வது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் சாலைவிபத்தில் மரணம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

பள்ளப்பட்டி அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி அனுதாபத்தை தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளது.
இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இயங்கிவரும் மக்தூமியா அரபி கல்லூரியின் பேராசிரியர்களும், மாணவர்களும் நேற்று கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகே  அவர்கள் பயணித்த கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மக்தூமியா அரபி கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே அகால மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது, மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. இவ்விபத்தில் பலியான ஆலிம் பெருமக்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் மக்தூமியா அரபி கல்லூரியை சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களது மறுமை வாழ்வு வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
மேலும் இவ்விபத்தில் அகால மரணமடைந்த வரலாற்று சிறப்புமிக்க மக்தூமியா அரபி கல்லூரியின் பேராசிரியர்கள் உட்பட அனைவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசை எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

‘நண்பேன்டா’ படத்துக்கு வரிவிலக்கு கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

Nanbenda சென்னை: ‘நண்பேன்டா’ படத்துக்கு வரி விலக்குக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின், ‘ரெட் ஜெயன்ட் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்தின் மூலம் ‘நண்பேன்டா’ படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகனும் இவரே. இந்தப் படம் நேற்று தமிழகமெங்கும் வெளியானது. நண்பேன்டா படத்துக்கு கேளிக்கை வரிச் சலுகை கோரி, தமிழக அரசிடம் உதயநிதி ஸ்டாலின் விண்ணப்பித்தார். ஆனால், கேளிக்கை வரிவிலக்கு அளிக்க தமிழக் அரசு மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘தமிழ்க் கலாச்சாரத்தை வளர்க்கும் விதமாக தமிழில் தலைப்பு வைத்துள்ள திரைப் படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக்கிறது. நண்பேன்டா படத்துக்கு வரிவிலக்கு கோரி கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்தோம். இதையடுத்து எங்களது படத்தைப் பார்வையிட்ட நிபுணர் குழு, இப்படத்தில் ஆபாசம், வன்முறைக் காட்சிகள் இருப்பதாகவும், ஆங்கிலச் சொற்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி வரிவிலக்கு அளிக்க மறுத்து விட்டது. ஆனால், இப்படத்துக்கு சென்சார் போர்டு அனைத்துத் தரப்பினரும் பார்க்கக் கூடிய படம் என்ற முறையில் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. எனவே, எங்களது படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் ’ என்று கோரியிருந்தார். இம்மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீது பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், நண்பேன்டா படத்துக்கு வசூலிக்கப்படும் கேளிக்கை வரி, இவ்வழக்கின் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது’ என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 7 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்ற முஸ்லிம் மாணவி

maryam_siddiqueமும்பை: பகவத் கீதை போட்டியில் முதலிடம் பெற்றார் மாணவி மரியம் சித்திக். முஸ்லிம் மாணவியான இவர் முதலிடம் பெற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மும்பையைச் சேர்ந்த மாணவி மரியம் ஆசிப் சித்திக் மும்பை மீரா ரோட் காஸ்மோபாலிடன் பள்ளியில்  6-ம் வகுப்பு பயின்று வருகிறார். மும்பையில் நடந்த கீதை சேம்பியன் லீக் போட்டியில் கலந்து கொண்டு இவர் முதல் பரிசைப் பெற்றுள்ளார். மும்பையில் இஸ்கான் அமைப்பு கீதை சேம்பியன் லீக் போட்டியை நடத்தியது. பகவத் கீதை குறித்து எழுத்துத் தேர்வு போட்டி நடத்தப்பட்டது. இதில் 195 பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 617 பேர் பேர் கலந்து கொண்டனர். இதில்  மரியம் ஆசிப் சித்திக் முதல் பரிசு பெற்றார். சித்திக் பைபிளும் படித்து வருகிறாராம். குரான் விரிவுரை ஆற்றுவதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறாராம். தற்போது மொழிபெயர்க்கப்பட்ட கீதையைப் படித்துள்ள மரியம், இஸ்கான் வைத்த ஏதேனும் ஒரு பதிலைத் தேர்வு செய்யும் தேர்வில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.mid-day இது குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட மரியம், எனக்கு எப்போதும் மதங்கள் குறித்த ஆர்வம் இருக்கும். அடிக்கடி மத சம்பந்தமான நூல்களை ஓய்வு நேரத்தில் படிப்பேன். இந்தப் போட்டி குறித்து ஆசிரியர் தெரிவித்தார். புத்தகத்தில் படித்ததைப் புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு என கருதினேன். போட்டியில் கலந்து கொள்ள எனது பெற்றோர் ஆதரவும் ஊக்கமும் அளித்தனர் என்று கூறினார் மரியம் சித்திக். மரியமின் தந்தை ஆசிப் சித்திக் இதுகுறித்துக் கூறியபோது, மரியாதையான குடும்பம் எங்களுடையது, எங்களிடம் எந்த மத வெறுப்போ தவறான உபதேசமோ கிடையாது என்றார். மும்பையின் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் சம்பவம் இது என்று புகழார்ம் சூட்டியுள்ள, ’மிட் டே’ பத்திரிகை, மரியம் மற்றும் அவர் தந்தையிடம் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளதுடன் முதல் பக்கச் செய்தியும் வெளியிட்டுள்ளது.

குறை தெரிந்தும் ஆதரிக்கும் நண்பர்களுக்கு நன்றி: கிரிராஜ் சிங் ட்விட்

உங்களின் குறைபாடுகள், தவறுகள், பலவீனங்கள் என அனைத்தையும் உணர்ந்து கொண்டும், அப்போதும் நீங்கள் ஒரு ஆச்சரியமான நபர் என நினைக்கும் ஒருவரை வாழ்க்கையில் பெறுவது மிகவும் சிறப்பானது. மிக்க நன்றி நண்பர்களே என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். சோனியா, ராகுல் குறித்து கருத்தைக் கூறியதில் பெரும் சர்ச்சைக்குள்ளானவர் கிரிராஜ் சிங். அவரது வீட்டுக்கு முன் காங்கிரஸார் பலத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவிலும், தனக்கு ஆதரவைத் தெரிவித்த நண்பர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.  

கிறிஸ்துவ மாணவர்களை தேடித்தேடிக் கொன்ற பயங்கரவாதிகள்: துப்பு கொடுத்தால் ரூ. ஒன்றரை கோடி வெகுமதி

keyna-terror-university-attackநைரோபி: கென்யா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ மாணவர்களை தேடிப் பிடித்து தலையை துண்டித்துள்ளனர் பயங்கரவாதிகள். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கென்யாவில் சோமாலியாவின் எல்லையை ஒட்டியுள்ள காரிசா பல்கலைக்கழகத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலை நுழைந்த 4 முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், பல்கலைக்கழக வளாகத்தில் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், 147 பேர் உயிரிழந்தனர். 79 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் மாணவர்களைத் தவிர 2 போலீஸ் அதிகாரிகள், ஒரு ராணுவ வீரர் மற்றும் 2 காவலாளிகளும் அடங்குவர். பல்கலைக்கழகத்திற்குள் தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளையும் ராணுவத்தினர் 13 மணி நேரத் தாக்குதலில் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் தங்கள் உடம்பில் குண்டுகளைக் கட்டியிருந்ததால் ராணுவத்தினர் சுட்டதும் அந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. அந்த பயங்கரவாதிகள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த கிறிஸ்தவ மாணவ, மாணவிகளைத் தேடிப் பிடித்து கொலை செய்துள்ளனர். அதிலும் கிறிஸ்தவ மாணவர்கள் பலரை தலையை துண்டித்து கொன்றுள்ளனர். அவர்கள் அதிகாலை தாக்குதல் நடத்தியபோது பல்கலைக்கழக வளாகத்தில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முஸ்லீம் மாணவர்களை பயங்கரவாதிகள் எதுவும் செய்யவில்லை. இந்தத் தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இத்தாக்குதலுக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர் அல் ஷபாப் பயங்கரவாதி முகமது மகமூத் குனோ என கூறப்படுகிறது. இவர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ. ஒன்றரை கோடிக்கு வெகுமதி அளிக்கப்படும் என்று கென்ய அரசு அறிவித்துள்ளது. கென்யாவில் கடந்த 17 ஆண்டுகளில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத் தக்கது. அல்–கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய அல்–ஷபாப் பயங்கரவாதிகள் சோமாலியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதில் ஆப்பிரிக்க யூனியன் ராணுவம் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த படையில் ஆயிரக்கணக்கான கென்யா ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் சோமாலியாவில் பயங்கரவாதிகள் மீது கடும் தாக்குதல் நடத்தி அழித்து வருகின்றனர். அதற்கு பழிக்கு பழிவாங்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறுமி கண் அறுவை சிகிச்சைக்கு உதவிய கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ்

03-04-15 Karur MLA News Photo 02 கரூர்: தன் தொகுதியில் உள்ள சிறுமியின் கண் அறுவை சிகிச்சைக்கு நிதி அளித்து உதவியுள்ளார் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., காமராஜ். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாந்தோன்றி ஒன்றியம், கே.பிச்சம்பட்டி ஊராட்சியில் வசிக்கும் கணேசன் – குணா தம்பதியரின் மகள் நேத்ரா. இவர் இங்குள்ள குள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கண் பார்வை மங்கிவந்த நிலையில் உடனடி அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று மருத்துவர் கூறியுள்ளார். இந்தத் தகவலைக் கேள்விபட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் தனது 47 வது மாத சம்பளத்தில் இருந்து ரூ 35 ஆயிரத்தை கண் அறுவை சிகிச்சை செய்ய கொடுத்து உதவினார். இதே போல் கே.பிச்சம்பட்டி துறையூர் ஸ்ரீ காளியம்மன் கோயில் திருப்பணிக்காக ரூ 5 ஆயிரமும், அதே பகுதியைச் சார்ந்த அருந்ததியினர் காலனியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயில் திருப்பணிக்காக ரூ 5 ஆயிரமும், கரூர் மகாத்மா காந்தி ரோட்டில் வசிக்கும் அ.தி.மு.க தொண்டர் முருகேசன் சிறு தொழில் செய்ய ரூ 10 ஆயிரமும் என ரூ 55 ஆயிரத்தை தனது சம்பளத் தொகையிலிருந்து ஜெயலலிதா பெயரில் கொடுத்தார். ஜெயலலிதா பெயரில் மாதந்தோறும் தனது சம்பளத்தை கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற (தனி) தொகுதி உறுப்பினர் எஸ்.காமராஜ் சமூக நலப் பணிகளுக்கு கொடுத்து வருகிறார். அவ்வகையில் தற்போது, தனது 47 வது மாத சம்பளத் தொகையை பள்ளி மாணவி கண் அறுவை சிகிச்சைக்காகவும், கோயில் திருப்பணிக்காகவும், அ.தி.மு.க தொண்டர் சுய தொழில் தொடங்கவும் கொடுத்துள்ளார். ஆதரவற்ற குழந்தைகள், எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்கள், நரிக்குறவர்கள், திருநங்கைகள், பம்பை வாசிப்பவர்கள், விவசாயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என தனது 46 மாத சம்பளத் தொகையைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

சிறந்த முதல்வர் நவீன் பட்நாயக்; கருத்துக் கணிப்பில் கேஜ்ரிவாலும் இடம்பெற்றார்

புது தில்லி: ‘இந்தியா டுடே’ ஆங்கில வார இதழ் சிறந்த முதல்வர்கள் குறித்து ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இதில் சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இடம்பெற்றனர். ஒடிசாவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், நவீன் பட்நாயக்குக்கு 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்லனர். சொந்த மாநிலத்தில், சந்திரபாபு நாயுடு, அரவிந்த கெஜ்ரிவால் ஆகியோருக்கு 55 சதவீதம் பேரும், சித்தராமய்யாவுக்கு 38 சதவீதம் பேரும், ராமன் சிங்க்குக்கு 36 சதவீதம் பேரும், சிவராஜ் சிங் சவுகான், அகிலேஷ் யாதவுக்கு 34 சதவீதம் பேரும் அவரவர் மாநிலங்களில் ஆதரவு தெரிவித்து உள்ளனர் நாடு முழுவதுமான கருத்துக் கணிப்பில், கேஜ்ரிவாலுக்கு 17 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அகிலேஷ் யாதவுக்கு 8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். 6 சதவீதம் பேர் சந்திரபாபு நாயுடுவுக்கும், மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக்குக்கு 5 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.