திருவிழாக்கள் அவரவர் மரபுப்படி ஆங்காங்கே கொண்டாடப்படுகிறது.அதில் வினோதமான பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.
இந்த வரிசையில் உத்தரகாண்டிலும் ஒரு வினோத திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சம்பவாட் மாவட்டத்தில் ‘பாக்வால்’ என்ற திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இரு பிரிவினராக பிரியும் மக்கள் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொள்கின்றனர். ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் நாளில், ஷ்ரவன் பூர்ணிமா என்ற பெயரில் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
‘கல் வீச்சு விளையாட்டின் போது மண்ணில் சிந்தப்படும் ரத்தத்துக்குப் பிறகே கடவுள் மகிழ்ச்சி அடைகிறார்’ என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது. நேற்று 10 நிமிடங்கள் நீடித்த நடந்த கல் எறியும் நிகழ்வில், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கோவிலின் தலைமை நிர்வாகி ஜோஷ் தெரிவித்துள்ளார்.
‘பழங்காலத்தில் கடவுளை குளிர்விக்க ஆண்டுக்கு ஒருமுறை ஒருவரை பலியிட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. அப்போது வயதான பெண்மணி ஒருவர், தன்னுடைய ஒரே பேரனைப் பலி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடவுளிடம் முறையிட்டுள்ளார்.
இதை அடுத்து அந்த கோவிலில் இருந்த பக்தர்களின் கனவில் வந்த கடவுள், முதியவரின் வேண்டுதலை தான் ஏற்பதாகவும் மனித பலிக்கு பதிலாக ஒருவரை ஒருவர் கற்களால் பலமாக தாக்கிக்கொண்டு மனித ரத்தம் மண்ணில் சிந்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை ஏற்ற பக்தர்களும், அன்று முதல் ஆண்டுதோறும் கற்களால் தாக்கிக்கொள்ளும் ஷ்ரவன் பூர்ணிமாவைக் கொண்டாடி வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
சம்யல், கஹர்வால், ஒல்கியா, லாம்கரியா ஆகிய நான்கு கடவுள்கள் தங்கள் நிலங்களை காப்பதாக உள்ளூர் மக்கள் நம்புகின்றனர். இந்த நான்கு கடவுள்களை வணங்குபவர்களும் இரு குழுவாகப் பிரிந்து கற்களால் தாக்கிக்கொள்கின்றனர். மூத்த மதகுருவிடமிருந்து உத்தரவு வந்தவுடன் தாக்குதலை நிறுத்தி விடுகின்றனர்.
‘திருவிழாவின்போது கற்கள் பயன்படுத்தக் கூடாது’ என அம்மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், ஊர் மக்கள் கற்களைப் பதுக்கி வைத்து திருவிழாவின்போது தாக்கிக்கொள்கிறார்கள்.