
அமமுகவில் அதிருப்தியடைந்த புகழேந்தி அதிமுகவில் இணையவுள்ளார்.
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “தினகரனை நம்பிச் சென்றவர்களை அவரால் காப்பாற்ற முடியவில்லை. அமமுக என்னும் கம்பெனியை நம்பி இனி இளைஞர்கள் வீண் போக வேண்டாம்.
நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்பே ஆர்.கே.நகர் வெற்றிக்கு காரணம். தினகரன் எப்போது அழைத்தாலும் நேரில் விவாதம் செய்ய தயார். தினகரன் அரசியலிலிருந்து தூக்கி எறியப்பட்டதற்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சரும், அமமுகவில் துணை பொதுச்செயலாளராகவும் இருக்கும் பழனியப்பன்.

அவர்தான் அமமுகவிலிருக்கும் ஸ்லீப்பர் செல். ஆளுங்கட்சிக்கான தனது வேலையை செய்துவிட்டு பழனியப்பனும் அதிமுகவில் இணைவார்.
சிறிது காலம் நான் கூவம் போன்ற சாக்கடையில் விழுந்து கிடந்தேன். தற்போது வற்றாத ஜீவந்தியோடு இணைந்து விட்டேன். சசிகலா மிக விரைவில் வெளிவருவார். சசிகலா மீதான மரியாதை எனக்கும் என்றும் குறையாது.

சசிகலா சிறையிலிருந்து வெளிவருவதை டிடிவி தினகரன் விரும்பவில்லை. தினகரன் கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், ஆட்சியையும் தொல்லை செய்ய நினைத்தால் எதிர்க்க நான் ஒருவன் போதும்.
பழனிசாமி என்ற நல்ல மனிதருக்கு இயற்கை உள்ளிட்ட அனைத்துமே சாதகமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று அதிமுகவில் இணைகிறோம்.
தமிழகம் முழுவதுமுள்ள அமமுகவினர் இதே மனநிலையில்தான் உள்ளனர். தினகரனை ஆதரித்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இரண்டாண்டு காலம் பட்டா இல்லாத புறம்போக்கு நிலமான அமமுகவில் பயணித்தோம்” எனக் கூறினார்.