ஆப்கனில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளை மடக்கிப் பிடித்த போது இரண்டு கேரள பெண்கள் சிக்கியுள்ளனர்.
இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் மற்றும் சிரியா ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 600 பயங்கரவாதிகளை ஆப்கானிஸ்தான் கிழக்கு மாநிலத்தில் அந்த நாட்டின் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களில் ஒரு பெண் ஒரு குடும்பத்தினர் உட்பட 10 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களின் அடையாளம் காணப்பட்ட நிலையில், ஒரு பெண்ணின் பெயர் ஆயிஷா என்பதும் 32 வயதான அந்தப் பெண் முன்னர் சோனியா செபஸ்டியன் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கேரளாவிலிருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை அனுப்பும் முக்கிய சதியாளராக விளங்கிய அப்துல் ரஷீத் அப்துல்லா என்பவரின் முதல் மனைவி ஆயிஷா. இவர் கோழிக்கோட்டில் உள்ள சர்வதேச அமைதி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர்.
அப்துல்லாஹ் இந்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய பீகாரைச் சேர்ந்த 30 வயது யாஸ்மின் முகமது ஷகீத் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 2016 ஆம் ஆண்டில் ஆயிஷாவுடன் அப்துல் ரஷீத் ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு கர்ப்பமடைந்த ஆயிஷா பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அமெரிக்கப் படையின் அதிரடி குண்டுவீச்சு சிக்கி கடந்த ஜூன் மாதம் ரஷித் இறந்துவிட்டார். இந்தத் தகவல் ஆப்கானிஸ்தானில் இருந்து கேரளாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
இன்னொரு பெண்ணின் பெயர் நிமிஷா இவர் பிந்து என்பவரின் மகள். இவர் கேரள மாநிலம் ஆற்றுக்கால் பகுதியைச் சேர்ந்தவர். ஆப்கானிஸ்தானில் பிடிபட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளில் என்னுடைய மகளும் ஒருவர் என்ற தகவல் எனக்கு கிடைத்திருக்கிறது என்று பிந்து கூறியுள்ளார்.
அவர் இதுகுறித்து கூறுகையில் ஆப்கன் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டவர்களில் என்னுடைய மகள் நிமிஷாவும் அவளுடைய கணவர் ஈசா, மூன்று வயது மகள் உம்மா குல்சூ ஆகியோர் சிக்கியுள்ளனர். எனக்கு சில படங்கள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலியா டிவி சேனலைச் சேர்ந்த பிரதிநிதிகள் அந்தன் படங்களை எனக்கு அளித்தனர்.
அதில் என்னுடைய மகளை என்னால் சரியாக அடையாளம் காண முடியவில்லை. ஏனென்றால் அவர் முகமூடி அணிந்து இருந்தார். இருப்பினும், என் மருமகனையும் பேத்தியையும் அடையாளம் காண முடிந்தது.
2018 நவம்பருக்குப் பிறகு அவர்களை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை… என்று அவர் கூறியுள்ளார்.
நிமிஷா காசர்கோடு போயிநாச்சி என்ற இடத்தில் உள்ள செஞ்சுரி பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தபோது வின்சென்ட் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது! அவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர். வின்சென்ட் கிறிஸ்தவர். பின்னர் வின்சென்ட் நிமிஷாவுக்கு திருமணம் நடைபெற்றது, அதன் பிறகு இருவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ளனர்.
இலங்கை வழியாக ஆப்கானிஸ்தான் சென்ற குழுவில் இந்த இரண்டு பேரும் இடம் பெற்றிருந்தனர். இவர்களை கேரளாவுக்கு திருப்பி அனுப்புவார்கள் என்று எதிர்பார்ப்பதாக பிந்து கூறியுள்ளார்.