
இந்தியாவில் முதல் முறையாக திருநங்கைகளுக்கென தனி பல்கலைகழகம் உத்திரபிரதேச மாநிலத்தின் பாசில் நகரில் உருவாகி வருகிறது.
இதில் ஆரம்பப் பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிற்றுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அகில இந்திய அளவிலான திருநங்கைகளுக்கான கல்வி சேவை அமைப்பின் தலைவர் கிருஷ்ணா மோகன் மிஸ்ரா கூறியதாவது,
ஒன்றாம் வகுப்பு முதல் பட்ட ஆராய்ச்சிப் படிப்பு வரை இங்கு திருநங்கைகளுக்கு பயிற்றுவிக்கப்படும்.
முதல் கட்டமாக ஆரம்பப் பள்ளிக்கான சேர்க்கைகள் நடைபெறும்.
அதன் பின்னர் மற்ற வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் நாட்டில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகள், கேலி கிண்டல்களுக்கு மத்தியில் இந்தச் சமூகத்தில் போராடி இந்தியாவின் அனைத்துத் துறைகளிலும் திருநங்கைகள் கால்தடம் பதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் பலர் திறமை இருந்தும் வெளியில் வராமல் இருப்பதற்கு மிக முக்கியக் காரணம் கேலி கிண்டலுக்கு அஞ்சி, தாழ்வு மனப்பான்மையுடன் மேற்படிப்புகளைத் தொடராததால் தான்.
இந்தப் பல்கலைகழகம் தொடங்கப்பட்ட பிறகு இந்த பய உணர்வு குறைந்து திருநங்கைகளின் வாழ்வு எழுச்சிப் பெறும் என நம்பப்படுகிறது என்றார்.



