கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை நயவஞ்சகமாக அழைத்துச் சென்று, மயக்கம் அடைய வைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோர் அளித்த புகாரில், திமுக நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப் பட்டனர்.
வேப்பனப்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த வாரம் பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அந்த மாணவிக்கு ஏற்கெனவே அறிமுகமான அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவன் அங்கு வந்துள்ளான்.

தெரிந்தவன் என்பதால், அந்த மாணவி அவனுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த மாணவனின் நண்பர்களான ராஜா, மஞ்சுநாத் இருவரும் அங்கே வந்துள்ளனர். அவர்கள் அந்த மாணவிக்கு குடிப்பதற்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதை வாங்கிக் குடித்த சிறிது நேரத்தில் அந்த மாணவி மயக்கம் அடைந்துள்ளார்.
அதன் பின்னர் அந்த மாணவியை மூவரும் காரில் ஏற்றிக் கொண்டு ஆந்திரமாநில எல்லையில் உள்ள ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் உள்ள இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கே மயங்கிய நிலையில் இருந்த அந்த மாணவியை மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்து கதறியுள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்த அவர், கதறி அழுதபடி, பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தங்கள் மகள் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதை அடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மாணவியுடன் பேசி வந்த 16 வயது மாணவனை பிடித்து போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ராஜா மற்றும் மஞ்சுநாத்தை தேடினர்.
இந்த நிலையில் தலைமறைவான ராஜா, மஞ்சுநாத் ஆகிய 2 பேரையும் நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.
இதில், ராஜா, அப்பகுதி திமுக., இளைஞரணி ஒன்றியச் செயலாளர் என்பது குறிப்பிடத் தக்கது. ராஜா (26) ஜோடுகொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி என்பதும், மஞ்சுநாத் (22) திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் என்பதும், இருவருமே குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.
பட்டப் பகலில் பொதுமக்கள் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவியை மயக்கமாக்கி கடத்திச் சென்று ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







