
“தேச பக்தியில் அவரது உயரத்தை எட்டிப் பிடித்தவர்கள் மிகக் குறைவு அவருக்கு கிடைக்க வேண்டிய புகழ் அவரை வந்து சேராமல், சில அரசியல்வாதிகள் செய்துவிட்டனர் சூரியனை மேகம் மறைப்பதால் சூரியனுக்கு குறைவில்லை அது கூட ஒரு அழகு தான் …
அவர் அடைபட்டுக்கிடந்த செல்லுலர் சிறையில் நிறுவப்பட்ட சுதந்திர ஜோதி பீடத்தில் , அவருடைய பொன்மொழியை அகற்றினார்கள் பார்லிமென்ட் கூடத்தில் அவருடைய ஓவியத்தை நிறுவ எத்தனையோ தடைகள் வந்தன ..
அவர் ஆயுள் முழுவதும் சிறையில் அடைபட்டு கிடைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறவர்களும் உண்டு. எழுதிக் கொடுத்துவிட்டு வந்தது இழிவு என்று பேசுபவர்கள் அவர் பட்ட அவதிகளை எண்ணிப் பார்க்கவில்லை. மார்செய்ஸில் கடலில் குதித்தவரை , இந்தியத் தலைவர்களே கூட ஆங்கிலேய அரசுக்கு ஜால்ரா போட்டு , திங்ராவைத் திட்டிக்கொண்டிருந்த கூட்டத்தில் , தனியாளாக எழுந்து நின்று எதிர்ப்புக் குரல் கொடுத்தவரை , பாரிசில் நல்ல பாதுகாப்போடு வாழும் வசதியிருந்தும் கைதானாலும் பரவாயில்லை என்று லண்டனுக்கு வந்த வரை கோழை என்று சொல்கிறார்கள் ..
சமுதாய சீர்திருத்தம் அரசியல் போராட்டத்தை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல .’சமூக சீர்திருத்தம் செய்யாமல் பெறுகிற சுதந்திரம் மூன்று நாட்கள் கூட தாக்கு பிடிக்க முடியாது ‘ என்று சொன்னார் சாவர்க்கர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடாமல் சமூக சீர்திருத்தம் செய்தவர்களை நாம் பாராட்டவில்லையா ? அவர் சொன்னதைப் போல் ‘ இமயமலையில் சிகரங்கள் வெளியே தெரிவதில்லை ‘ என்பதற்காக சிகரங்கள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? சிகரம் சின்னதாகப் போகுமா? சிகரத்தை நோக்கி கைகூப்புவோம் ! அந்த மரியாதையாவது செய்யக் கற்றுக் கொள்வோம் .”
( வீர் சாவர்க்கர் – வீரம் , வீரம் , மேலும் கொஞ்சம் வாழ்க்கை . இலந்தை . சு. இராமசாமி . கிழக்கு பதிப்பகம் )


