கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வது அவ்வளவு எளிதல்ல என வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கேரள மாணவி தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவிய உயிர்கொல்லி ‘கொரோனா வைரஸ்’ உலகின் பல நாடுகளை பாதித்தது. இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இந்தியா வந்த கேரளாவை சேர்ந்த 20 வயது மாணவிக்கு முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர், வூஹான் மாகாணத்தில் உள்ள பல்கலைகழத்தில் பயின்று வருகிறார். தீவிர சிகிச்சைக்கு பின் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார்.
இது தொடர்பாக அந்த மாணவி கூறியதாவது: ஜன.,17 வரை சீனாவில் இயல்பாக தான் இருந்தது. அதன்பின்னர் நிலைமை மாறிவிட்டது. கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட எனக்கு கடந்த ஜன.,30ம் தேதி பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பின்னர் நான் தனிமைப்படுத்தப்பட்டேன். அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. எனது உடல்நிலை முன்னேற்றத்தை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா, எனது தாயாரிடம் அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.தொடர்ந்து சிகிச்சையில் இருந்த நான் பிப்.,20ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்.
அதன்பின்னர் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் இருந்தேன். தற்போது உடலளவில் நான் நன்றாக உள்ளேன். சீனாவுக்கு எப்போது திரும்புவது என தெரியவில்லை.
பல்கலைகழகம்., பிப்.,15ம் தேதி திறக்கப்பட இருந்தது. எனது வகுப்பில் பயிலும் 65 பேரில் 45 பேர் இந்தியர்கள். நாங்கள் இப்போது ஆன்லைன் மூலமாக வகுப்பை கவனித்து வருகிறோம். இவ்வாறு அந்த மாணவி கூறினார்.