“தர வரிசை அறியா பேதமை” கி.வா.ஜ., ஒரு கட்டுரையில்: தங்கம், தன்னைப் படைத்த பிரம்மதேவனிடம் சென்று, குலுங்கிக் குலுங்கி அழுததாம். அதைப் பார்த்த பிரம்மா, ‘தங்கமே… ஏன் இப்படி அழுகிறாய்…’ என்று கேட்டாராம். உடனே தங்கம் சொன்னதாம்… ‘என்னையும் படைத்து, அந்த தட்டானையும் படைத்தாயே… அதனால் தான் அழுகிறேன்…’ என்றதாம். ‘ஏன் உனக்கு அவன் மேல் கோபம்… உன்னை நெருப்பிலிட்டு உருக்குகிறானே… அதனால் வருத்தமா?’ என்று கேட்டார். ‘இல்லை… அப்படிச் செய்வதனால் தான் நான் மாசு நீங்கி ஒளிர்கிறேன்…’ என்றது தங்கம். ‘அப்படியானால், அவன் பட்டறையில் வைத்து தகடாகத் தட்டுகிறானே… அதனால் உனக்கு வேதனை உண்டாகிறதா?’ என்று கேட்டார். ‘இல்ல இல்ல… தகடாக மாறினாலும் இறைவனுக்கே கவசமாகி விடுகிறனே…’ என்றது தங்கம். ‘பின்னே, அவன் பெரிய துளையிலிருந்து சிறிய துளையிட்டு, உன்னைக் கம்பியாக இழுக்கிறானே அப்போது உன் உடல் நலிந்து, நைந்து துன்புறுகிறாயோ…’ என்றார். ‘இல்ல இல்ல… நல்லவர்களை எல்லாம் தங்கக் கம்பி என்று என்னைத் தானே உவமானமாகச் சொல்கின்றனர்; அதனால, அதற்காக வருத்தமில்லை…’ என்றது தங்கம். ‘இதற்கெல்லாம் வருத்தம் இல்லை என்றால், நீ புலம்புவதற்கு என்ன காரணம்?’ என்று கேட்டார் பிரம்மா. ‘அந்தப் படுபாவி என்னை எடை போடும் போது, தராசில் என்னை ஒரு தட்டில் வைத்து, எனக்குச் சமமாக, மற்றொரு தட்டில், குன்றிமணியை வைத்து நிறுக்கிறானே… அந்த அவமானத்தை என்னால் தாங்க முடியவில்லை…’ என்று புலம்பியது தங்கம். — தர வரிசை அறியா பேதமையை, இப்படி அழகாகக் கற்பனை செய்து, வடமொழி கவிஞர் ஒருவர் பாடியிருக்கிறார்.
“தர வரிசை அறியா பேதமை”
Popular Categories


