
வரும் ஜனவரி மாதம் 4ஆம் தேதியில் இருந்து, சென்னை – மதுரை தேஜஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் ஆதரவு குறைந்ததால், இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை – மதுரை இடையே வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் வகையில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே தொடங்கப் பட்டது. மிகக் குறைவான நேர பயணம் என்பதால், பயணிகளின் ஆதரவு நன்றாக இருந்தது.
இந்நிலையில் கொரோனா கால ஊரடங்கின் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா தளர்வுக்குப் பின் அக்.2ல் இருந்து, மீண்டும் ரயில்கள் குறிப்பட்ட எண்ணிக்கையில் சிறப்பு ரயில்களான இயக்கப்பட்டன.
அந்த வரிசையில் தேஜஸ் ரயிலும் இயக்கப் பட்டது. எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்பட்டதால், பயணிகள் அதிகம் பேரால் இந்த ரயிலுக்கு வர முடியவில்லை என்று புகார் அளிக்கப் பட்டது. இதை அடுத்து, பயணிகள் நேரம் மாற்றம் செய்ய வலியுறுத்தியதால், அரை மணி நேரம் கழித்து இயக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.
இதன்படி அக்.12ல் இருந்து நேரம் மாற்றப்பட்டு எழும்பூரில் இருந்து காலை 6.30க்குப் புறப்பட்டு, மதுரைக்கு நண்பகல் 12.50க்கு சென்றடைந்தது. பின்னர் மதுரையில் இருந்து மாலை 3.15க்கு புறப்பட்டு இரவு 9.30க்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது.
இந்த நிலையில் இந்த ரயிலிலில் பயணிகள் வருகை குறைந்ததை அடுத்து, இரு வழியிலும் ஜன.4 முதல் தேஜஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.