தமிழ்நாட்டை சேர்ந்த 58 வயதான மணமகன் 64 வயது மணமகளை காதலர் தினத்தில் திருமணம் செய்த சம்பவம் கேரளாவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் தற்போது கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள அடூரிலுள்ள மகாத்மா ஜனசேவனா கேந்திராவில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 58. சரஸ்வதி என்பவரும் அதே இடத்தில் வசித்து வந்தார். இவருக்கு வயது 64.
இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து வந்தனர். சரஸ்வதியை விட ராஜன் 6 வயது குறைந்தவர். ராஜனின் சொந்த ஊர் திருச்சி. இவர் பத்தனம் திட்டாவிலுள்ள பல ஹோட்டலில் சமையல்காரராக பணி செய்து வந்தார்.
சபரிமலை சீசன் வந்துவிட்டால் பம்பாவில் ராஜனை காண முடியும். கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த மையத்தில் வந்து தங்கினார். தற்போது, இந்த மையத்தில் முதியோர்களை பராமரித்து அவர்களுக்கு உணவு சமைக்கும் பணியை ராஜன் தான் செய்து வருகிறார்.
சரஸ்வதியின் பெற்றோர் இறந்து போன நிலையில் 3 ஆண்டுகளாக அவர் இந்த மையத்தில் தங்கியிருகிறார். இந்நிலையில், ராஜனுக்கும் சரஸ்வதிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் சேர்ந்து தங்களின் காதலை பற்றி மையத்தில் உள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
மையத்தில் உள்ள நிர்வாகிகள் இவர்களின் காதலுக்கு எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் இந்த வயதில் காதலா? என்று கேலி செய்யவும் இல்லை. மாறாக இருவருக்கும் நல்லபடியாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அவர்களின் திருமணத்துக்கு பின் மையத்தின் அருகிலேயே அவர்களுக்கென்று தனியாக வீடும் கொடுத்தனர்.
இந்நிலையில், காதலர் தினம் அன்று ராஜன்- சரஸ்வதிக்கு அடூர் எம்.எல்.ஏ கோபக்குமார் தலைமையில் திருமணம் நடை பெற்றது. எம்.எல்.ஏ ராஜன் கையில் தாலி எடுத்து கொடுத்தார். மேலும் விழாவிற்கு வந்த நண்பர்கள் புதுமண தம்பதியை மனதார வாழ்த்தினர்.
இதை பற்றி கூறிய அந்த தம்பதி “எங்களுக்கென்று யாரும் இல்லாத காரணத்தால் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களை யாரும் கேலி செய்யவில்லை. எல்லோரும் சேர்ந்து வாழ எங்களை ஊக்கப்படுத்தினர்” என்று கூறியுள்ளனர்.