இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதாக் கட்சிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று, அக்கட்சியின் தலைவர் முத்துசாமி, கட்சி அறிமுக நிகழ்வின் போது கூறினார்.
நம் அண்டை நாடான இலங்கையில் ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று தொடங்கப் பட்டுள்ளது. இக்கட்சியின் தொடக்கம் குறித்த அறிமுக நிகழ்வு, ஊடக சந்திப்பு இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா பாஜக., குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அக் கட்சியின் தலைவர் வி.முத்துசாமி, இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியதில் மகிழ்ச்சி அடைகிறோம். இலங்கையில் தமிழ் மக்களை முன்னிலைப் படுத்தி, பல கட்சிகள் உள்ளன. இருந்தாலும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அக்கட்சிகள் புறம் தள்ளி விடுகின்றன. தமிழர்களின் நலனுக்காகவே இலங்கை பாரதிய ஜனதா கட்சியை தொடங்கியுள்ளோம்.
ஆனால் எங்களுக்கும், இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. தமிழர்களுக்கான கல்வி பொருளாதார மேம்பாடு, விளையாட்டு, கலாசார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று அவர் இந்த நிகழ்வின் போது தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பாரதிய ஜனதா கட்சியின் செயலராக எம்.இந்திரஜித், பொருளாளராக திலான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இந்தியாவில் இது குறித்த பரபரப்பான செய்திகள் பரவியிருந்தன. இந்தியா மட்டுமின்றி இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளிலும் பாஜக., ஆட்சி அமையும், அதற்கான திட்டம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கையில் உள்ளது என்று பாஜக.,வைச் சேர்ந்த திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் அண்மையில் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி கிளை தொடங்கப்படும் என்று பரபரப்பான தகவல்கள் உலா வந்த நிலையில், இலங்கையில் உள்ள சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அதுகுறித்து குறிப்பிட்டபோது, இலங்கையில் உள்ள பெரும்பாலான கட்சிகள் இந்தியாவில் உள்ள கட்சிகளின் சுவடுகளை தாங்கியே தொடங்கப்பட்டு இருக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட பெயர்களில் கட்சிகள் உண்டு. ஜனதா பெயரிலும் கட்சிகள் உள்ளன. இந்தியாவில் இந்து மக்களுக்கு அரணாக பாரதிய ஜனதா கட்சி திகழ்கிறது. அது போன்ற ஒரு கட்சி இலங்கைக்கும் தேவை என்பதால் அத்தகைய பெயரை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று குறிப்பிட்டார்
இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் ஸுக்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் என்ற பெயரில் உலகில் பல்வேறு இடங்களில் கிளைகள் நடைபெற்று வருகின்றன.. அந்த அமைப்பின் கனவான அகண்ட பாரதம் என்ற எண்ணம் சாத்தியமாக இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை என்று பலரும் கருத்து தெரிவித்தனர் இந்நிலையில் இலங்கையில் அரசியல் அமைப்பாக இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற ஒன்று தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது