“காசி நகர் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்க ஒரு கருவி செய்வோம்” என்ற பாரதியின் வரிகளை மேற்கோள்காட்டி காசியில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். காசியின் பிரதமர் உரையை காஞ்சியில் கேட்டார் தமிழக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை.
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி வழிபடும் நிகழ்ச்சியை, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்கள் நேரடியாக பார்க்க, நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்றார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்…
ஹிந்து சமய அறநிலையத் துறை, சினிமாவில் வருவது போல், ‘மீடியா’ வாயிலாக கவர்ச்சிகரமான வேலையை செய்கிறது. இதை விடுத்து, அடிப்படை வேலையை செய்ய வேண்டும். சேகர்பாபு குங்குமம், திருநீறும் வைத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். அவரது கடந்த காலம், அனைவருக்கும் தெரியும்.
நேர்மையாக பேசும்போது, பதிலும் நேர்மையாக கிடைக்கும். தி.மு.க., தொண்டர்கள் புகார் கொடுப்பர். அதை மாவட்ட செயலர்கள் வாயிலாக, போலீசார் வழக்கு பதிவு செய்வர். பா.ஜ., சார்பில், 300க்கும் மேற்பட்ட புகார் கொடுத்து உள்ளோம். மறைந்த தலைமை தளபதி பிபின் ராவத் பற்றி, மோசமான பதிவுகள் வெளியிட்ட தி.மு.க., வினரை பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும். டி.ஜி.பி., என்பவரை வைத்து, வேறு யாரோ வேலையை செய்கின்றனர்.. என்று கூறினார் அண்ணாமலை.