தன் மாமனார் சொன்ன பணத்தைக் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டதால், கௌரவம் பாதிக்கப் பட்டதாகக் கூறி, கல்யாணம் செய்துகொண்ட கால் மணி நேரத்தில் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் ஒருவர் திருமணத்துக்காக மணப் பெண் தேடியுள்ளார். மணமகள் கிடைத்து, அவளது தந்தையிடம் பணம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அப்போது ஒரு லட்சம் தினார் கொடுத்து (20,000 பவுண்ட்) உங்கள் மகளை திருமணம் செய்கிறேன் என மணமகளின் தந்தையிடம் கூறியுள்ளார் அவர். இதற்கு அந்தப் பெண்ணின் தந்தையும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இவர்களது திருமணம் நண்பர்கள் உறவினர்கள் முன்னிலையில் ஷரியா நீதிபதியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த பின்னர், வாக்குறுதி அளித்த படி, பணத்தை தருமாறு மணமகளின் தந்தை கேட்டுள்ளார். அப்போது அந்த மணமகன் 50 ஆயிரம் தினார் மட்டுமே (10,000 பவுண்ட்) கொடுத்தாராம்.
வாக்குறுதி அளித்து சொன்ன தொகையைக் கொடுக்காமல், அதில் பாதியளவு மட்டுமே கொடுத்ததால் கோபம் கொண்ட மணமகளின் தந்தை, பொறுமையிழந்து அங்கே வந்திருந்த அனைவரின் முன்னிலையிலும் மணமகனிடம் சண்டை போட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக எண்ணினார் அந்த மணமகன். இப்படிப்பட்ட பெண்ணும் மாமனாரும் வேண்டாம் என முடிவு செய்த அவர், திருமணமான 15 நிமிடத்திலேயே தலாக் சொல்லி அந்தப் பெண்ணை விவாகரத்து செய்துள்ளார்.
கல்யாண காண்ட்ராக்டில் கையெழுத்து போட்ட கால் மணி நேரத்தில் அதை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இப்படி 15 நிமிடத்தில் மணமுறிவு ஏற்பட்டது ஒன்றும் எமிரேட்ஸ் வரலாற்றில் அதிசயமானது இல்லையாம்.
கல்யாணம் செய்த சில நொடிகளில் தலாக் சொல்லி ஏற்கெனவே ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாராம். கடந்த 2012ல் கல்யாணம் முடிந்த கையுடன் பெண்ணின் தந்தை, தன் பெண் பார்த்து வரும் வேலையை தொடர்ந்து செய்துவருவார் என்று கூறியதும், அந்த நபர் தலாக் சொல்லிவிட்டாராம்!



