சென்னை: சென்னை அறிவாலயத்தில் திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வேண்டுமென்றால் தொண்டர்கள் இனி ரூ.500 சிறப்புக் கட்டணம் செலுத்தி, பார்க்க வேண்டியிருக்கும். அத்தகைய அறிவிப்பை திமுக., தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
கருணாநிதி தலைவராக இருந்த போது, தொண்டர்கள் அவருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுப்பது வழக்கம். பின்னர் புத்தகமும் அதில் சேர்ந்து கொண்டது. அவ்வாறு சேரும் சால்வைகள், மடிப்பு கலையாமல், சென்னையில் உள்ள துணிக்கடைகளில் கொடுக்கப் பட்டு, அவை பாதி விலைக்கு விற்கப் பட்டு விடும். புத்தகங்கள் திமுக., சார்பு நூலகங்களுக்குப் போய்விடும்.
செயல் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் தலைவர் ஆனதும் இதே போன்ற நடைமுறைதான் பின்பற்றப் பட்டு வந்தது. ஆனால், ஸ்டாலினைப் பார்க்க வருபவர்கள் இனி, சால்வைகளோ புத்தகங்களோ வாங்கி வர வேண்டாம் என்றும், தொண்டர்கள் இனி ரூ.500 கொடுத்தால் போதும் என்றும், பணமாகக் கொடுத்தால் அது தேர்தல் செலவுகளுக்கு ஆகும் என்றும் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாமே இப்போது ஜிஎஸ்டி வரம்புக்குள் வந்துவிட்டது. புத்தகம் சால்வை வாங்குபவர்கள் வரி கட்டி வாங்குவார்கள். ஆனால், ரூ.500 பணமாகக் கொடுக்கும் போது, அதற்கு முறையான கணக்கு எதுவும் இருக்காது, மீண்டும் அது முறைகேட்டுக்கே வழிவகுக்கும் என்று குமுறுகின்றனர் திமுக.,வினர்.
ஏற்கெனவே, திமுக., நிதி வட்டிக்கு விடப் பட்டு, அதை யாரெல்லாம் அனுபவித்து வருகிறார்கள் என்ற பட்டியல் தன்னிடம் இருப்பதாக மு.க. அழகிரி தனது குற்றச்சாட்டாக முன்வைத்தது திமுக.,வினரிடையே சலசலப்பையும் கேள்விக் குறியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தொண்டர்கள் பணமாகத் தாருங்கள் என்று வெளியிடப் பட்ட அறிவிப்பு, மேலும் மேலும் முறைகேடுகளைச் செய்யவே திமுக., பொறுப்பாளர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள் என்ற எண்ணத்தை தொண்டர்களிடையே விதைத்திருக்கிறது.




