சபரிமலை சென்றுவந்த இரு பெண்களுக்கும் தங்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அவர்களுக்கு பதிலளிக்குமாறு கூறியதன் பேரில் கேரள அரசு அளித்த பதிலில், சபரிமலையில் 51 பெண்கள் தரிசனம் செய்ததாக கூறியுள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கேரளாவில் போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி பிந்து, கனகதுர்கா எனும் கம்யூனிஸ பின்னணியைச் சேர்ந்த இரு பெண்கள், மாநில அரசின் துணையுடன் சபரிமலைக்குச் சென்று வந்தனர். இது குறித்த வீடியோ வெளியான நிலையில் மேலும் போராட்டங்கள் வலுத்தன. வன்முறை வெடித்தது. பதற்றமான சூழல் எழுந்ததால், சபரிமலைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட அந்த இரு பெண்களும் போலீசாராசல் பாதுகாக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பதற்றம் தணிந்த நிலையில், தங்களது வீடுகளுக்கு இருவரும் திரும்பினர். இந்நிலையில், வீடு திரும்பிய கனகதுர்காவை அவரது மாமியார் தாக்கியதாக அவர் போலீஸில் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கனகதுர்காவும், பிந்துவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது குறிப்பிடத் தக்கது.
இதை அடுத்து இன்று விசாரித்த நீதிமன்றம், கனகதுர்கா, பிந்துவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கேரள காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் மீதான விசாரணையின் போது, இதுவரை 51 இளம் பெண்கள் சபரிமலைக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளதாகவும், அவர்களில் 24 பேர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் என்றும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் கூறியுள்ளது.