திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவனின் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு எதிரான போன்கால் பிரச்சினையில் திமுகவும் கனிமொழியும் சிக்கலில் சிக்கியுள்ளனர்.
தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் , தூத்துக்குடி எம்.எல்.ஏவும் , முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் , சைவ வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் பேசிய ஆடியோ டேப் விவகாரம் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது.
அந்த போன் காலில், அவர் தேவேந்திர குல வேளாளர்கள், அவர்களை வேளாளர் சமூகமாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தமிழக அரசு இதைப் பரிசீலிக்க நான்கு உறுப்பினர்கள் கொண்ட கமிட்டியை நியமனம் செய்துள்ளதை எதிர்த்து , நீங்கள் பெட்டிஷன் தாக்கல் செய்யுங்கள் என்று தூண்டி விடும் விதமாகப் பேசியுள்ளார்!
அவர்கள் வேளாளர் சமூகம் என்று காட்டிக் கொள்ள விடாதீர்கள் என்றும், எனவே உங்கள் சமுதாயம் திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பேசுவதாக ஆடியோ டேப்பில் பதிவாகியுள்ளது.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளான தேவேந்திர குலத்தார், பள்ளர், கடயர், பன்னடி, களடி ஆகியோரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வைத்த கோரிக்கையைத் தான் , திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவன் , வெள்ளாளர் பட்டியலில் சேர்க்க முயற்சி நடப்பதாகவும் இதனால் இரு சமூகத்தினரிடையே கலவரத்தையும் விஷத்தையும் தூண்டும் விதமாக செயல்படுகிறார் என்றும் புதிய தமிழகம், இதனைக் கண்டித்து போஸ்டர் அடித்து எச்சரிக்கை செய்துள்ளது.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஓட்டுக்கள் புதிய தமிழகம் கட்சி அதிமுக அணியில் இருப்பதால் அவர்களுக்கு சாதகமாக மாறும் என்பதால்தான் இத்தகைய தூண்டுதல் முயற்சி நடந்துள்ளதாக திமுகவினரே குற்றம் சாட்டுகின்றனர்.
கீதா ஜீவன் இதை வன்மையாக மறுத்தாலும், திமுகவின் நிர்வாகி மனோகர் ராஜ் என்பவர் கீதா ஜீவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி எஸ்பி முரளி ரம்பாவிடம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மேலும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த திமுக நிர்வாகிகளே, திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் மனுக்களை அளித்து வருகின்றனர்.
இதனால் கனிமொழி மிகுந்த எரிச்சல் அடைந்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் போட்டிய வேண்டிய நிலையில், அச்சத்தில் உள்ளதாகவும் கூறப் படுகிறது.
தூத்துக்குடியை சேர்ந்த திமுக.,நிர்வாகி மனோஹர் ராஜ் என்பவர், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா ராவிடம் ஒரு புகார் மனு கொடுத்திருக்கிறார். அதில், எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டத்தில் கீதாஜீவனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். அரசியல் லாபம் கருதி இரு சமூகங்களுக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் விதத்தில் செயல்படுவதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறார்.
கீதா ஜீவனின் தொலைபேசி உரையாடல்… ஒலிக்கோப்பு



