பேஸ்புக் வலையில் நுழைந்து… நட்பு வளர்த்து, நேசம் வளர்த்து.. காதலாகிக் கசிந்து கண்ணீரில் காலம் தள்ளும் பெண்களுக்கு கோவையைச் சேர்ந்த ஒரு பெண் அதே பேஸ்புக்கில் இத்தகைய பதிவினைச் செய்துள்ளார்…
இந்தக் கொடுமையான சம்பவத்துக்கு அப்புறம் சராசரி “கோயம்பத்தூர் குடும்பத்தில”வளர்க்கப்பட்ட நான் வீட்டில இருந்து ‘பத்திரமா இரு’ , ‘ஆம்பிள பிரெண்ட்ஸ் கூட வெளியே போகாதே’ அப்படி, இப்படின்னு எப்பவும் போல போன் வரும்னு காத்துக்கிட்டு இருந்தேன். ஆனா, என் அம்மா கூப்பிட்டு என்ன பேசினாங்க தெரியுமா?
“நீ வீட்டைவிட்டு ரொம்பத் தூரம் தள்ளி இருக்கேன்னு தெரியும். உன்னை எப்பவும் ரொம்பத் தைரியமான பொண்ணாத்தான் வளத்திருக்கேன். என்ன நடந்தாலும் நானும், உன் அப்பாவும் எப்பவும் உன்கூட இருப்போம். எவனாச்சும் உன் போட்டோ, வீடியோவ வெச்சு உன்ன மிரட்டினா ‘என்ன வேணா பண்ணிக்கோடா. உலகத்தில இருக்கிற எல்லாப் பொண்ணுக்கும் இருக்கிற அதே உடம்புதான் எனக்கும் இருக்கு. இப்படிலாம் பண்ணினா எல்லாம் எந்த அவமானமும் எங்களுக்கு வராது’ அப்படின்னு சொல்லிடுமா’
இப்படி அம்மா சொன்னதைக் கேட்டதும் அவங்களை அப்படியே கட்டிப்பிடிச்சுகிட்டு அழணும்னு இருந்துச்சு. நம்மோட குடும்பம் நம்ம மேலே வைக்கிற நம்பிக்கை, தர்ற பாதுகாப்பு மாதிரி விலைமதிப்பில்லாத ஒன்னு வேறென்ன இருக்கு? யாரா இருந்தாலும் பயப்படாம தில்லா இருங்க. உங்களால இதுக்கு மேலே உறுதியா இருக்க முடியாதுங்கற அளவுக்கு நிமிர்ந்து நில்லுங்க. எல்லாக் குடும்பங்களும் உங்க குழந்தைங்களுக்கு ஆதரவா இருங்க. நீங்க தர்ற ஆதரவு, அரவணைப்பை விடப் பெரிய பலம் வேறொன்னும் இல்லை.
– நர்மதா மூர்த்தி