ஏசு உயிர்த்தெழுந்து வந்த நாள் என்று கிறிஸ்துவர்கள் உலகெங்கும் கொண்டாடும் ஈஸ்டர் தினமான ஞாயிற்றுக் கிழமை நேற்று முக்கிய சர்ச்சுகள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டுகள் வெடித்தன. இதில், சுமார் 300 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குண்டுவெடிப்புகள் தொடர்பாக சிலரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோரமான சம்பவத்தை அடுத்து, நாடு முழுவதும், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
வதந்திகள் மற்றும் பீதிகளைப் பரப்புவதைத் தடை செய்யும் நோக்கில், இணையதள சேவைகள், சமூக இணையதங்கள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்ததாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து, வேறு வெடிகுண்டுகள் ஏதும் பதுக்கப்பட்டுள்ளதா என இலங்கை முழுவதும் தீவிர சோதனை நடந்து வருகிறது.
இந்நிலையில் கொழும்பு பேருந்து நிலையத்தில் இன்று 87 டெட்டேனேட்டர்கள் குச்சிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனைக் கைப்பற்றிய போலீசார் அவற்றை செயல் இழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, இன்றும் கொழும்புவில் சர்ச்சு ஒன்றின் அருகே நிறுத்தப் பட்டிருந்த வேனில் ஒரு குண்டு வெடித்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியானது.
இந்த குண்டுவெடிப்புகளில் உள்ளூர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பான நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.