
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளார்.
சட்டமன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது மாதவரம் தொகுதி அதிமுக உறுப்பினர் சுதர்சனம், எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் தொடர்பாக விரைவில் கணக்கெடுப்பு நடத்தப்படும்.
அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் 5 ஆண்டுக்கு மேல் வசிப்பவர்களின் வருமான உச்சவரம்பை அறிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
வருமான உச்சவரம்பின் அடிப்படையில், அங்கு வசிப்போருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சோழவரம், நெற்குன்றம், மேட்டு சூரப்பட்டு ஆகிய இடங்களில் உள்ள 15 வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடுகள் கட்டித்தருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
அதேபோல், அரசின் ஒரு லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்துக்காக இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து நிலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசு நிலம்ஆக்கிரமிப்பு குடியிருப்புபட்டாபேரவைஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


