அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாகக் கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாகக் கூறப்படும் வழக்கில் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜரானார். இந் நிலையில் வரும் 22ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறாத நிலையில், நிர்மலாதேவி திடீரென கண்களை மூடிக்கொண்டு அங்கேயே அமர்ந்து தியானத்தில் ஈடுபடத் தொடங்கினார்.
பின்னர் ஏதோ வாயில் முணுமுணுத்த அவர், தனக்கு காலை 10 மணிக்கே தீர்ப்பு கிடைத்து விட்டதாகவும், தான் இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆகிவிட்டதாகவும் கூறிய அவர், திடீரென தனக்கு எதிராக குற்றம் சாட்டிய மாணவிகள் தூக்குப் போட்டு இறந்து விட்டதாகவும் ஏதோ புலம்பியபடி இருந்தார்.
தனது முடிகளைத் தானே வெட்டி, அதனை தனது காதில் செருகிக்கொண்டு அமர்ந்திருந்த அவர், நீண்ட நேரம் தியானத்தில் இருந்தது போல் காட்டிக் கொண்டார். பின்னர் அவராகவே அங்கிருந்து வெளியேறினார்.
வழக்கு விசாரணையின்போது ஆஜரான நிலையில் நீதிமன்றத்தை விட்டு வெளியேற மறுத்து கணவர், உறவினர்கள் தன்னை அழைத்துச் செல்வார்கள் என்று நினைத்து சற்று நேரம் அவர் தியானத்தில் ஈடுபட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர்.



