லைட் எரிய வேண்டும் என்றால் மின்சாரம் கட்டாயம் தேவை. ஆனால் தெலுங்கானாவில் ஒரு சகோதர, சகோரிக்கு உடலில் எந்த இடத்தில் வைத்தாலும் மின்சாரம் இல்லாமல் பல்ப்புகள் எரிகிறது.
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் சிரசன்னா ராம் நகரை சேர்ந்தவர் ஷேக் சாந்த் பாஷா. இவர் கடந்த வாரம் தனது வீட்டில் இருந்த லைட் பீஸ் போனதால் கடைக்கு சென்று பல்பு வாங்கி வந்தார். அந்த பல்பை வைத்து வீட்டில் இருந்த அவரது மகனும், மகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் கையில் வைத்திருந்தபோது மின்சாரம் இல்லாமல் பல்ப் எரிவதை கண்டு ஆச்சரியம் அடைந்தனர். இது தான் இப்படியா இல்லை எல்லாமே அப்படியா என்று காண்பதற்கு மற்றொரு பல்பு வாங்கி வந்து சோதித்தார் அந்த பல்பும் அவர்கள் உடலில் பட்டவுடன் எரியத் தொடங்கியது.
இதேபோன்று ஷேக் சாந்த் பாஷா உடலில் வைத்தாலும் லைட் எரிந்தது. இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் பரவியவுடன் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவராக புதிய பல்புகளை வாங்கி வந்து அந்த சிறுவர்கள் மீது வைத்து சோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே இதே போன்று அஜ்மீரில் ஒரு சிறுவன் மீது உடல் முழுவதும் மின்சாரம் இருக்கக்கூடிய சம்பவம் தெரிய வந்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் மூன்று பேரின் உடலில் மின்சாரம் இருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனை பார்ப்பதற்காக அந்த கிராமத்திற்கு பொதுமக்கள் வந்தபடி உள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் ஒவ்வொருவரின் உடலிலும் மின்சாரம் என்பது இயற்கையாகவே இருக்கும். உடலில் ஈரப்பதம் இல்லாத நேரத்தில் அவை தெரியாது. ஈரப்பதத்துடன் யாராக இருந்தாலும் மின்சாரம் இல்லாமல் தொட்டால் பல்ப் எரியும் என கூறுகிறார்கள்.