ஹிந்து மதத்தில் இருந்து உருவானதே பௌத்தம்… எனவே முரன்பாடுகளைத் திணிக்காதீர்கள் என்று கூறிய பௌத்த பிக்கு யாழ் நாக விகாரை விகார அதிபதி விமலதேரர், ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் பௌத்த பிக்கு அல்ல என்று கூறியுள்ளார்.
ஹிந்துக்களுக்கு இடையிலும் பௌத்தர்களுக்கு இடையிலும் உருவாகியிருக்கும் முரண்பாடுகள் குறித்து யாழ் ஊடக அமையத்தில், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது, அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் கூறியபோது… பௌத்த மதத்துக்கும் இந்து மதத்துக்கும் தலைமை கிடையாது! தர்மம்தான் இரு மதங்களுக்குமே தலைமை! இந்த இரு சமயங்களுக்கும் இடையில் பிரிவுகள் இல்லை! ஹிந்து சமயத்தில் இருந்தே பௌத்த சமயமும் உருவானது.
பௌத்த மதத்தின் காவல் தெய்வங்களாக இந்து சமயக் கடவுள்களே இருக்கின்றனர்! எந்த விகாரைக்குச் என்றாலும் இந்து சமயக் கடவுள்களைப் பார்க்கலாம்! இந்த நிலையில் இரு சமூகங்களுக்கு இடையில் முரண்பாடுகள் திணிக்கப்படுகிறது. அதற்கு ஒரு சில பௌத்த பிக்குகளே காரணம். அந்த சில பிக்குகளின் செயல்பாடுகள் பௌத்த சமயத்தின் நிலைப்பாடு ஆகாது. அது பௌத்த சமயத்தின் நிலைப்பாடும் அல்ல!
சில பௌத்த பிக்குகளின் செயல்பாடுகள் ஹிந்து மதத்திற்கு பங்கம் உண்டாக்குவது போல் அமைந்துள்ளது. இவ்வாறான பிக்குகள் உண்மையில் முறையான பவுத்த பிக்குகள் தானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
நாக விகாரை வடக்கு தெற்கு மக்களுக்கு இடையிலான உறவு பலமாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஹிந்து பௌத்த மக்கள் இடையில் நல்லிணக்கம் உண்டாக்கும் பொறுப்பை நாம் மேற்கொள்வோம். மேலும் யாழ் மாவட்டத்தில் பௌத்த மதத்தின் பெயரால் ஹிந்து மதத்துக்கு பங்கம் எதுவும் விளைவிக்கக் கூடாது! அவ்வாறு விளைவிக்கப்பட்டால் அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்.
ஹிந்து மதத்தை பௌத்தர்களும் பௌத்த மதத்தை ஹிந்துக்களும் பாதுகாக்க வேண்டும்! அதுபோல் இந்து சமய மக்கள் பிற மதங்கள் மீது வைக்கும் நம்பிக்கையை பௌத்த மதத்தின் மீதும் வைக்க வேண்டும். அதுவே இரு சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் என்றார்.
அதன் பின்னர் பேசிய ஹிந்து மத குரு ஒருவர், “மதங்களுக்கிடையில் நல்லதொரு ஒற்றுமை புரிந்துணர்வு உள்ளது. அதை சீர்குலைக்க சில தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறாக சீர்குலைக்க மேற்கொள்ளப்படும் செயல்களை அனைத்து தரப்பினரும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இங்கு சில இடங்களில் பௌத்த மதமாற்றம் நடைபெறுகிறது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். மதரீதியில் இன ரீதியில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் இலங்கையில் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்” என்று கோரினார்.