பாஜக., எம்.பி.க்களுக்கான நன்னடத்தை பயிற்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுப்பினர்களின் வரிசையில் அமர்ந்திருந்த படம் இன்று சமூகத் தளத்தில் வைரலானது. இதுதான் பாஜக., என்று பலரும் கருத்து எழுதி பகிர்ந்து கொண்டனர்.
ஒழுக்கம், நடத்தை, நாடாளுமன்ற நெறிமுறைகளைப் பின்பற்றுதல், கொள்கை விவகாரங்களில் கவனம் செலுத்துதல் உள்ளிட்டவை தொடர்பாக பாஜக., எம்பி.,க்களுக்கு வகுப்பு நடத்த கட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு பயிற்சி கருத்தரங்கு, கூட்டம் நடத்த முடிவு செய்தது. இந்தப் பயிற்சி வகுப்புக்கு “அப்யாஸ் வர்கா” என்று பெயரிடப் பட்டுள்ளது.
அதன்படி, இரு நாள் பயிற்சி வகுப்பு ஆக.3 சனிக்கிழமை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்தப் பயிற்சி வகுப்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக., செயல் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களின் தலைமையில் இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப் படுகிறது.
காலையில், கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவின் உரையுடன் இந்தப் பயிற்சி வகுப்பு தொடங்கியது. அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உறுப்பினராக கலந்து கொண்டு, வரிசையில் அமர்ந்திருந்தார்.
பின்னர் இந்தப் பயிற்சி வகுப்பில் மாலை நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு குறித்து அமித்ஷா உரையாற்றினார். ஞாயிறு நாளை பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று கூறப் பட்டது.
இந்தப் பயிற்சி வகுப்பில் பாஜக., எம்பி.,க்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது
இரண்டாவது முறையாக அசுர பலத்துடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், கட்சி எம்பி.,க்கள் அனைவரும் ஒழுக்கமுடனும், நேரம் தவறாமலும் இருக்க வேண்டும் என்றும், நாடாளுமன்றக் கூட்டங்களில் எம்.பி.க்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும், கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் உரிய துறை அமைச்சர்கள் அந்த நேரத்தில் அவையில் இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறார் பிரதமர் மோடி. அதனைப் பழக்கப் படுத்துவதற்காகவே இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப் படுகிறதாம்.
தற்போதைய நாடாளுமன்றத்துக்கு தேர்வான பாஜக., உறுப்பினர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால், இத்தகைய பயிற்சி வகுப்பு தேவை என்று கட்சி கருதுகிறது. முன்னதாக, 2014ல் மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற போதும் இதே போன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
அண்மைக் காலமாக பாஜக., உறுப்பினர்கள் சில சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். பேச்சு, தேவையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அவப்பெயரை சம்பாதிக்கின்றனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, பாலியல் புகார்களில் சிக்குவது, சுங்கச்சாவடி ஊழியர்கள் மீதான தாக்குதலில் ஈடுபடுவது என முறையற்ற வகையில் ஈடுபட்டு அவப்பெயரை வாங்குவதைத் தவிர்க்கவும் இந்தப் பயிற்சி பயன்படும் என்று கூறப் படுகிறது.
भाजपा द्वारा संसद भवन, नई दिल्ली में आयोजित ‘सांसद कार्यशाला’ में सम्मिलित हुआ। pic.twitter.com/xl2EJfWFDN
— P Muralidhar Rao (@PMuralidharRao) August 3, 2019