கருத்து சொல்வதென்றால் அனைவருக்கும் சக்கரைப் பொங்கல் சாப்பிடுவது போன்று தான்.
அதில் சுகி சிவம் என்றால் என்ன சுப. வீரபாண்டியன் என்றால் என்ன எல்லாரும் ஒன்றுதான். எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்!
ஈவேரா காலந்தொட்டு ஹிந்து ஆன்மிகத்தை ரத்தஞ் சொட்ட கீறி கலந்து கேலிப் பேசிய மனோபாவம் தமிழ்நாட்டில் மிகவும் மலிவான ஒன்று.
இப்போது எல்லாம் நாத்திகர்களை விட ஆத்திகர்கள் தான் பக்தர்களது மனோபாவத்தை பக்தப் பாவத்தை தூஷிக்கிறார்கள்.
இறை வழிபாடு என்பது திட்டமிடல் அல்ல இதயத்தை இழத்தல். அதற்கு கோவில் வழி தெரியாது, கூட்ட நெரிச்சல் தெரியாது, வியாபார யுக்தி தெரியாது, உயிர் போகுமோ என்று தெரியாது!
நாளை சாகப் போகிறவர் தரிசனத்துக்கு சக்கரவண்டியில் வருகிறார், பச்சிளங் குழந்தையை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு நடக்கிறான் பாருங்கள்… அந்த பக்தியைப் பாருங்கள்… அதை நான் என்னிரு விழிகளால் பார்த்தேன்!
40 வருடமாக குளத்து தண்ணீரில் ஊறிக்கிடந்த அத்திவரதர் என்ன உங்களுக்குத் தந்து விடப் போகிறார். உங்கள் வீட்டில் உள்ள பெருமாள் தராததையா இவர் தந்து விடப் போகிறார் என்று சுகி சிவம் கேட்கிறார்.
பக்தி மனம் பித்து என்பதை இவர் அறியாதவர் போலும், இத்தனை காலம் பக்தியைப் பற்றி இவர் என்னதான் சொற்பொழிவு செய்து கிழித்தாரோ தெரியவில்லை?
பக்தனுக்கு தெரியாதா?
தான் வீட்டில் வழிபடும் பெருமாளும் அத்திவரத பெருமாளும் அல்லது ஸ்ரீரங்க பெருமாளும், ஏழுமலை ஆண்டவன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை மாதவபெருமாள் யாராக இருந்தாலும் யாவரும் ஒன்று என்று இவர்தான் அவர்களுக்கு பாடம் நடத்த வேண்டுமா?
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களிலும் அவர் சில ஒழுங்கு கருத்துகளை உதிர்ப்பது வாடிக்கையாகிவிட்டது. அதற்கும் கைத்தட்டல் வேறு!
தமிழகத்தை பொறுத்த வரை ஆன்மிக விஷயத்தில் வழிவழியாக நடைபெற்றுக் கொண்டிருக்க இருக்கும் சில முறைகள் குறித்து விமர்சனங்களை வைக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் என்ற உணர்வு அவருக்கு துளியும் இல்லாமல் போய்விட்டது! அதற்காக அவர் வருத்தப்படுவதாகவும் தெரியவில்லை.
அத்தி வரத பெருமாள் தரிசிப்பதற்கு பெரும் கூட்டமாக திரண்டு வருவதை பார்த்து அரசையும் தொண்டு இயக்கங்களுக்கும் அவர் நல்லவிதமான அறிவுரைகளை வழங்கி முறைப்படுத்தலாம். சமூக அக்கறை உள்ளவராக இருந்தால் அவரே கூட முன்னிருந்து நடத்தலாம். ஒரு நாற்பது நாட்களை தனக்கு சோறு போட்ட ஹிந்துமததுக்கு அவர் பணிவிடை செய்தால் ஒன்றும் குறைந்து விட மாட்டார்.
அதை விடுத்து, ஹிந்து மதம் குறித்த ஏதாவது குறைகள் காண நேரிடும் போது, அதற்கு மகிழ்ச்சி குதியாட்டம் போடும் கூட்டம் இருக்கிறது என்பதை கூட துளி கூட தன் மனதில் வைக்காமல் இப்படி பொத்தாம் பொதுவாக பேசுவது எந்த விதத்தில் சேர்த்தி…
நீங்கள் பேசுவதை தானே இங்கு உள்ள நாத்திகர்களும் பேசுகிறார்கள், நீங்கள் ஆன்மீகத்தோடு பேசுவதற்கும் அவர்கள் கடவுள் இல்லை என்று பேசுவதற்கும் அப்படி ஒன்றும் வித்தியாசம் இல்லையே!
நாத்திகம் புரையோடிப்போன அரசியல் பின்னணியில் உள்ள இந்த தமிழகத்தில், உங்களைப் போன்று ஆரம்ப காலத்திலிருந்து ஆத்திகம் பழகி, அதன் மூலம் புகழும் பணமும் பார்த்த உங்களால் ஆன்மிகத்திற்கு செய்யும் கைமாறு இதுதானா?
இந்த பக்திக்காக யாராவது உயிரை விட்டால் மிகவும் பெரிய வேதனை தான் அதை யாரும் ஒத்துக் கொள்வார்கள். அதை சரி செய்ய அத்தனை முயற்சியும் அனைவரும் முன்னின்று எடுக்க வேண்டும்.
ஆனால் உங்களைப் போன்ற ஆன்மீக பின்னணியில் உள்ளவர்கள் நாத்திக பார்வையாளர்கள் போல் பக்தியை நையாண்டி பேசுவது சரியல்ல.
சற்று தள்ளி இரும் பிள்ளாய் ! உங்களுக்கு இங்கே வேலை இல்லை!!
– அதாகப் பட்டது ஜனங்களே..!