ஆர்ட்டிகிள் 370 நீக்கம் என்பது சமூக அநீதிச் செயலா… கஷ்மீரின் தனித்தன்மையை பாதிக்கும் செயலா… மாநில உரிமையில் குறுக்கிடும் செயலா?
இந்திய சமூக நீதியின் மிக முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று : குறிப்பிட்ட மக்களுக்கு பிறப்பால் சலுகைகள் தருவது தவறு.
அந்தவகையில் பார்த்தால், கஷ்மீருக்குத் தரப்பட்டிருக்கும் சிறப்புச் சலுகை என்பது அப்பட்டமாக சமூக நீதிக்கு எதிரானது.
ஒருவேளை கஷ்மீரில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு நடந்திராமல் பண்டிட்களே இயல்பாகவே அங்கு பெரும் எண்ணிக்கையில் இருந்திருந்து, கஷ்மீர பண்டிட்டான நேரு இந்த சிறப்புச் சலுகைகளைக் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
திராவிட, கம்யூனிஸ, தலித்திய, இஸ்லாமிய, கிறிஸ்தவ, முதலாளித்துவ, நவீனத்துவ, பெண்ணிய சக்திகள் அனைத்துமே அதை ஒழித்துவிட்டுத்தான் மறுவேலை பார்த்திருப்பார்கள்.
இப்போதும் அந்த சிறப்புச் சலுகையைக் கொடுத்தது கஷ்மீர பண்டிட் நேருதான். பிராமணர் செய்யும் அனைத்தையும் எதிர்ப்பதே சமூக நீதி அரசியல் என்ற முதல் தத்துவக் கோணலுடன் ஆரம்பித்து முற்றும் கோணலாகவே இயங்கிவரும் திராவிட சக்திகள், கஷ்மீர் பள்ளத்தாக்கு இன்று இஸ்லாமியப் பெரும்பான்மையுடன் இருப்பதால் அவர்களுக்குத் தரப்பட்ட சிறப்புச் சலுகையை ஆதரிக்கிறது. இது சமூக நீதி இயக்கத்தின் அப்பட்டமான இரட்டைவேடம்/அபத்தம்/அயோக்கியத்தனம்.
கஷ்மீரில் பிற இந்தியர்கள் நிலம் வாங்க முடியாது என்பது அக்ரஹாரத்துக்குள் பிறர் நுழையக்கூடாது என்று சொல்வதைவிட மிக மிகத் தவறான சமூக அநீதியே.
கஷ்மீருக்கு தனி கொடி, தனி சபை, தனி சட்டதிட்டங்கள் என்ற அரசியல் அடையாளங்கள் எல்லாம் பிராமணர்களுடைய பூணூலைவிட கொடூரமான அபாயகரமான அடையாளங்கள்/சலுகைகள். சத்தியத்தை சதா சர்வகாலமும் நினைவுறுத்தும் நோக்கில் பிராமணர்கள் அணிந்துகொள்ளவேண்டிய பூணுலை அறுப்பதை சமூக நீதிப் போராட்டத்தின் அங்கமாக நினைக்கும் திராவிட இயக்கத்தினர் கஷ்மீரின் தனி அரசியல் அடையாளங்களை இதைவிடக் கடும் கோபத்துடன் எதிர்ப்பதுதான் நியாயமான செயலாக இருக்கும்.
ஒரு பகுதி மக்களின் தனி கலாசாரம் என்பது வேறு. விசேஷ அரசியல் சலுகை என்பது வேறு.
கஷ்மீரின் தனி கலாசாரத்தை பாஜக பெரிதும் மதித்துப் போற்றுகிறது. மாநில உரிமைகளை அதைவிட உயர்வாக மதிக்கவும் செய்கிறது. ஆனால், கஷ்மீரின் கலாசாரத்தை மதிக்காத இஸ்லாமிய, கிறிஸ்தவ, கம்யூனிஸ, திராவிட சக்திகள் மாநில உரிமையில் மத்திய அரசு தலையிடுவதாகச் சொல்லி இதை எதிர்க்கின்றன.
உண்மையில் கஷ்மீருக்கு மட்டும் தனி சலுகை என்பதுதான் மாநில உரிமைகளுக்கும் மாநில சமத்துவத்துக்கும் எதிரான செயல்.
குழந்தையைக் கடத்திச் சென்றவனிடமிருந்து மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் காவலரைப் பார்த்து, திருடனின் தனி மனித உரிமையில் நீங்கள் தலையிடுகிறீர்கள் என்று குற்றம் சாற்றுவதைப் போன்ற முட்டாள்த்தனம்/அயோக்கியத்தனம் இது.
கஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் சம்மதத்தைப் பெறவில்லை என்றொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஜம்மு மக்களும் லதாக் மக்களும் இந்த திருத்தத்தை வரவேற்கிறார்கள். கஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் சொற்ப அடிப்படைவாத சக்திகள் மட்டுமே இதை எதிர்க்கின்றன. எனவே மூன்று பகுதிகளுக்கும் சேர்த்து அவர்கள் பேசுவது தவறு.
அடுத்ததாக, 370 சிறப்புச் சலுகையானது கஷ்மீர் மக்கள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் தரப்பட்டிருக்கவில்லை. இந்தியாவின் பிற பகுதி மக்களிடம் கேட்டும் தரப்பட்டிருக்கவில்லை. எனவே, திரும்பப் பெறும்போதுமட்டும் மக்கள் சம்மதம் என்பது அப்படி ஒன்றும் அவசியமில்லை.
மம்தா பானர்ஜியும் ஸ்டாலினும் இதைக் கொஞ்சம் கூடுதலாகவே எதிர்ப்பதற்கு அந்த ஆர்டிகிள் 370 தரும் சலுகைகளைத் தமது மாநிலத்துக்கும் பெறவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருப்பதே காரணம். அதாவது அவர்களுடைய அசட்டுத்தனமான, அபாயகரமான பிரிவினைவாத நோக்கங்களுக்கு அது சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அதாவது அவர்களைப் பின்னால் இருந்து இயக்கும் அடிப்படைவாத சக்திகள் அவர்களை அப்படி ஆட்டுவிக்கின்றன.
இந்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கஷ்மீருக்குத் தரப்பட்டிருக்கும் சிறப்புச் சலுகையை இந்தியாவில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களும் தரவேண்டிய சிறப்புச் சலுகையாகவே பார்க்கிறார்கள்.
தனித்தன்மை என்பது வேறு; பகைமை என்பது வேறு.
ஒரு போர்க்களத்தில் வாளுடன் சிலர் களத்தில் நிற்பார்கள். சிலர் ஈட்டியுடன் நிற்பார்கள். சிலர் கதாயுதத்துடன் நிற்பார்கள். சிலர் கவண்களும் நிற்பார்கள். எல்லாரும் ஒரே ஆயுதத்துடன் நிற்க வேண்டும் என்று சொல்வதுதான் தவறு. அந்த சுதந்தரத்தைப் பறித்தால்தான் தவறு. ஆனால், படையில் நிற்கும் அனைவரும் எதிரியைக் குறிவைத்துத்தான் தாக்கவேண்டும் என்ற உத்தரவென்பது ஒற்றைப்படையானதுதான் என்றாலும் அதுதான் அங்கு அனுமதிக்கப்படும். சொந்த படையினரைப் பார்த்து என் ஈட்டியைத் திருப்பிவைத்துக்கொள்ள சுதந்தரம் கிடையாதா என்று கேட்பது முட்டாள்த்தனம்.
பலவந்தமாக தேச பக்தியை ஊட்ட முடியாது என்ற அசட்டு வாதத்துக்கு இங்கு இடமில்லை. தாக்க வேண்டியது எதிரியைத்தான். சொந்த படையினரை அல்ல. இங்கு சொந்தப் படையினரைத் தாக்கும் உரிமை என்பது தனித்தன்மை சார்ந்தது அல்ல. துரோகிகளாக இருக்கும் சுதந்தரம் யாருக்கும் கிடையாது. துரோகிக்குத் தரப்படும் தண்டனை என்பது சர்வாதிகாரச் செயல் அல்ல; சரியான செயலே.
இஸ்லாமியரை முஸ்லிம் என்று சொல்லலாம்; பாய் என்று சொல்லலாம்; துலுக்கர் என்று சொல்லலாம்; முஹமதியர் என்று சொல்லலாம்; ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். ஆனால், முக்கால் என்று அழைக்கக்கூடாது. அது அவமானப்படுத்தும் சொல். அப்படிச் சொல்வது என் விருப்பம்; என் உரிமை என்று யாரும் பேசக்கூடாது. அதுபோல்தான் தேசியக் கொடியை அவமதிப்பது என் சுதந்தரம் என்று யாரும் சொல்லக்கூடாது. தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கமாட்டேன் என்று சொல்ல யாருக்கும் சலுகை கிடையாது.
பட்டியல் ஜாதி மக்களுக்கு இந்தியாவின் பிற மாநிலங்களில் தரப்படும் சலுகைகள் எதுவுமே கஷ்மீரில் கிடையாது. அங்கு இஸ்லாமியருக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை. இது சமூக அநீதி இல்லையா? இதுதானே இப்போது நேர்செய்யப்பட்டிருக்கிறது.
இந்திய மத்திய அரசு பிற மாநிலங்களைவிட கஷ்மீருக்கு மிக அதிகப் பணத்தை வாரி வழங்குகிறது. ராணுவத்துக்கான தொகை அல்ல; கஷ்மீர மாநில அரசுக்குக் கொட்டிக் கொடுக்கிறது. ஆனால், அப்படியான பணம் வேறொரு மாநிலத்துக்குத் தரப்பட்டிருந்தால் அது இந்தியாவின் முன்னணி மாநிலமாக அனைத்துத் துறைகளிலும் வந்திருக்கும்.
கஷ்மீரிலோ அந்தப் பணமானது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஓரிரு குடும்பங்களாலும் பிரிவினைவாத இயக்கங்களாலும் முழுவதுமாகச் சுரண்டப்பட்டுவந்திருக்கிறது.
கஷ்மீர் அரசுகள் கஷ்மீர இஸ்லாமியர்களுக்கும் எந்த நன்மையும் செய்திருக்கவில்லை.
கலவரக் குரல்கள் ஒடுக்கப்பட்டு ஒத்திசைவை விரும்பும் அமைதிக் குரல்கள் முன்னிலைக்குக் கொண்டுவரப்படவேண்டும். சுற்றுலா, பொருளாதார, தொழில் முனைவுகள் வேகமாக முன்னெடுக்கப்படவேண்டும். மைய நீரோட்டத்துடன் முழுமையாகக் கலப்பதன் மூலம் மட்டுமே அது சாத்தியம். அதுவே நடந்திருக்கிறது.
எது நடந்ததோ அது நன்றாக இருந்திருக்கவில்லை.
எது நடந்திருக்கிறதோ அது நன்றாக நடந்திருக்கிறது.
எனவே, இனி எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.
வாழ்க ஜம்மு-கஷ்மீர் & லதாக் யூனியன் பிரதேசங்கள்…
வளர்க பாரதம்.
கட்டுரை: – பி.ஆர்.மகாதேவன்